சூர்யாவை உலக ஸ்டாராக மாற்றிய அன்புமணி.. பாமகவுக்கு அவமானம்தான் மிஞ்சும்.. டாக்டர் ஷாலினி நக்கல்.

By Ezhilarasan BabuFirst Published Nov 19, 2021, 5:03 PM IST
Highlights

சூர்யாவின் மனைவி ஜோதிகா கோவிலுக்கு பணம் கொடுப்பதை விட மருத்துவமனைகள் கட்ட, பள்ளிக்கூடங்கள் கட்ட பணத்தை செலவு செய்யலாம்  என பேசியதைத் தொடர்ந்து  சனாதன மதவாதிகளால் அவர் குறி வைக்கப்பட்டு வருகிறார்.

அன்புமணி ராமதாசும் பாமகவும் எந்த அளவிற்கு சூர்யாவை எதிர்க்கிறார்களோ, அவர் அந்த அளவிற்கு உலக ஸ்டாராக உயர்ந்து கொண்டே இருக்கிறார் என மனநல மருத்துவர் ஷாலினி தெரிவித்துள்ளார். ஜெய்பீம் திரைப்படத்தை எதிர்ப்பதன் மூலம் கடையில் பாமகவுக்கு அவமானம்தான் மிஞ்சும் என்றும் அவர் விமர்சித்துள்ளார். ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள படம் ஜெய் பீம், இந்த திரைப்படம்  பழங்குடியின சமுதாய  மக்கள் காவல்துறையின் கொடுமைக்கு எப்படி இரையாகின்றனர் என்பதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.  இந்த திரைப்படம் நாடு, மொழி, இனம் கடந்து மக்க்ள மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. ஹாலிவுட் படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவிற்கு பார்வையாளர்களை பெற்று வருகிறது. ஒட்டுமொத்த தேசமும் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகிறது. 

இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு குருமூர்த்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்தின் வீட்டில் அக்னிச்சட்டி காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட காட்சியை வன்னியர் சமூகத்தை திட்டமிட்டே இழிவுபடுத்தும் நோக்கில் வைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டியுள்ள பாமக மற்றும் வன்னியர் சங்கம், இந்த காட்சியை நீக்க வேண்டும் என கொரிக்கை வைத்தது, படக்குழுவும் அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்கியது. ஆனாலும் தற்போது அந்த காட்சியை மட்டும் நீங்கினால் போதாது தெரிந்தே இந்த தவறை செய்த நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், அத்துடன் ஐந்து கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என பாமக வழக்கு தொடுத்துள்ளது. இதற்கிடையில்  பாமகவின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி என்பவர் சூர்யாவை  எட்டி உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதை அரசியல் படந்து பலரும் கண்டித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சூர்யா- பாமக மோதல் என்பது பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் பலரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சிலர் பாமகவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இந்நிலையில் மனநல மருத்துவர் ஷாலினி பாமகவை விமர்சித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், இதுவரை தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் பெரும்பாலான படங்களில் தலித்துகளே வில்லன்களாக சித்தரிக்கப்பட்டு வருகின்றனர். இன்னும் பல சாதியின் பெயர்களையும் அப்பட்டமாக சொல்லிய வில்லன் கதாபாத்திரங்கள் வந்துள்ளன. ஆனால் இதுவரையிலும் அது அரசியலுக்கான விவாதப் பொருளாக மாறியது இல்லை. ஆனால் இயல்புக்கு மாறாக ஜெய் பீம் திரைப்படம் அரசியலாக்கப்பட்டுள்ளது.  ஜெய்பீம் திரைப்படத்தை பொறுத்தவரையில் ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏதாவது ஒரு பெயரை வைத்து தானே வில்லன் கதாபாத்திரத்தை இயக்கமுடியும், அந்த கதையின் களம், அந்த கதையில் சூழல், அங்கு வாழும் சமூகம் என்பதெல்லாம் அதில் இடம்பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும்.  இது போல எல்லோரும் பிரச்சினை எழுப்பினால் அதற்கு ஒரு முடிவே இருக்காது.

சூர்யாவின் மனைவி ஜோதிகா கோவிலுக்கு பணம் கொடுப்பதை விட மருத்துவமனைகள் கட்ட, பள்ளிக்கூடங்கள் கட்ட பணத்தை செலவு செய்யலாம்  என பேசியதைத் தொடர்ந்து  சனாதன மதவாதிகளால் அவர் குறி வைக்கப்பட்டு வருகிறார். இந்ந நிலையில் சூர்யா எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால், செல்வாக்கு மிகுந்த தலைவராக அவர் வர வாய்ப்புகள் உள்ளது. அவர் மீது மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளது. அவர் அரசியலுக்கு வந்தால் உடனே அவர் வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் சூர்யாவை மட்டம் தட்டி வைக்க வேண்டும் என விரும்புபவர்கள் அவரை எதிர்க்கின்றனர். எதார்த்தமாக பொதுமக்களிடத்தில் சூர்யா நல்லவரா? அவருக்கு ஓட்டு போடுவீர்களா? என்று கேட்டீர்கள் என்றால் உடனே ஆம்  என்று தான் சொல்வார்கள். இதைப்பார்த்து அஞ்சுபவர்கள் அவரை தாக்குவோம் என்று சொல்கிறார்கள். பாமாக சூரியா மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறுகிறது, 

ஒரு திரைப்படத்தின் கதாசிரியர் மன்னிப்பு கேட்கலாம், படத்தின் இயக்குனர் மன்னிப்பு கேட்கலாம், அதில் நடித்த சூர்யா எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் இப்போது அவரை மன்னிப்பு கேட்க வைத்தால் அது அவருக்குத்தான் சாதகமாக முடியும். இதன் மூலம் சூர்யாவுக்கு இன்னும் விளம்பரம் அதிகமாக கிடைக்கும், அவர் இப்போதே சர்வதேச அளவில் ஸ்டாராக மாறிவருகிறார். யார் அவரை பணியவைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ, அவர்களுக்கு அவமானம்தான் மிஞ்சும். பாமகவுக்கு அவமானம்தான் மிஞ்சும். இவ்வாறு அவர் பேசியுள்ளார். 
 

click me!