இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்த பாமக.. மெருமைமிகு மகள்களுக்கு அன்புமணியின் நேசம்.!

Published : Aug 06, 2021, 10:24 PM IST
இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்த பாமக.. மெருமைமிகு மகள்களுக்கு  அன்புமணியின் நேசம்.!

சுருக்கம்

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணியினரின் போர்க்குணமிக்க ஆட்டத்தை பாராட்டும் வகையில் இந்திய அணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளின் மகளிர் ஹாக்கி பிரிவில் இன்று நடைபெற்ற மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியிடம் தோல்வி அடைந்ததை எண்ணி இந்திய வீராங்கனைகள் கண்ணீர் விட்டு கலங்கியது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்கள் போட்டியில் தோற்றிருக்கலாம் ஆனால் இந்தியர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் கண்ணீர்விடவோ, கவலைப்படவோ தேவையில்லை. மாறாக இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காக இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் பெருமிதம் கொள்ளவேண்டும்.
ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளின் அரைஇறுதி ஆட்டம் வரை இந்திய மகளிர் அணியினர் முன்னேறினார்கள். ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வரலாற்றில் இந்திய அணி அரைஇறுதி போட்டிக்கு தகுதிபெருவது இதுவே முதல்முறை. இந்திய அணியை பொறுத்தவரை இது மிகப்பெரிய சாதனை. இது ஒரு சாதனை என்பது கோடிக்கணக்கானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், இந்த சாதனையைப் படைப்பதற்கு இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் அனுபவித்த வலியும், வேதனையும் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்காது.
ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் பங்கேற்ற இந்தியா தவிர்த்த பிற நாட்டு அணியினருக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்ச்சி வழங்கப்பட்டது. ஆனால், இந்திய மகளிர் ஹாக்கி அணியினருக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கவில்லை. மிகவும் நெருக்கடியான சூழலில் போதிய வசதிகள் இல்லாத உள்ளூர் மைதானங்களில்தான் அவர்கள் பயிற்சி பெற்றனர். பிற நாட்டு அணிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஸ்பான்ஷர்ஷிப் கிடைத்தன. ஆனால், இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு அத்தகைய உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. ஒடிசா மாநில அரசுதான் சில கோடி ரூபாய் உதவிகளை வழங்கியது. அதுவும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் ஓர் அணியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு போதுமானதல்ல.
இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு மிகப்பெரிய அளவில் ஒலிம்பிக் அனுபவம் இல்லை. இதுவரை இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமே இந்திய மகளிர் ஹாக்கி அணி பங்கேற்றிருக்கிறது. இதுதான் அவர்களின் மூன்றாவது ஒலிம்பிக் போட்டி. ராணி ராம்பால் தலைமையிலான இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள 16 வீராங்கனைகளில் 8 பேருக்கு இதுதான் முதல் ஒலிம்பிக் போட்டி. மற்றொருபுறம் வந்தனா கட்டாரியா என்ற வீராங்கனையின் வீட்டுமுன் சிலர் வன்முறையில் ஈடுபட்டதால் இந்திய வீராங்கனைகள் அனைவரும் கடுமையான மனஉளைச்சலில் இருந்தனர்.
இவ்வளவு நெருக்கடிகளையும் இடர்ப்பாடுகளையும் தாங்கிக்கொண்டு இந்திய மகளிர் ஹாக்கி அணி அரைஇறுதி வரை முன்னேறியதும், ஆஸ்திரேலியா போன்ற உலகின் வலிமை வாய்ந்த அணிகளை வீழ்த்தியதும் இந்திய மகளிர் ஹாக்கி வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய சாதனை. இந்தியாவின் பெருமைமிகு மகள்களே... மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தின் முதல் பாதிவரை வலிமை வாய்ந்த பிரிட்டன் அணியைவிட அதிக கோல் அடித்து நீங்கள்தான் முன்னணியில் இருந்தீர்கள். கடைசியில்தான் ஆட்டம் திசைமாறியது. விளையாட்டுகளில் இது இயல்புதான். இதற்காக நீங்கள் கலங்க வேண்டாம்.
இன்றைய போட்டியில் தோற்றதற்காக கண்ணீர் விட்ட நீங்கள் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று ஆனந்த கண்ணீர் விடப்போவதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது. அதற்காக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இப்போதே எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணியினரின் போர்க்குணமிக்க ஆட்டத்தை பாராட்டும் வகையில் இந்திய அணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ரூ.10 லட்சம் வெகுமதி வழங்கப்படும்.” என்று அறிக்கையில் அன்புமணி தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Vijay: ஜெயலலிதா வீட்டில் குடியேறும் விஜய்.?! மீண்டும் பரபரப்பாகும் போயஸ்கார்டன்.!
TVK Government : இவருக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி கவிழுமாம்! யார் தெரியுமா?