
நெல்லை மாநகர் மாவட்ட செயலாளரும், நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட பரமசிவ ஐயப்பன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த சம்பவம் டிடிவி.தினகரனை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்தது. பல இடங்களில் டெபாசிட் காலியானது. கோவில்பட்டியில் போட்டியிட்ட தினகரனும், விருத்தாச்சலத்தில் போட்டியிட்ட பிரேமலதாவும் தோல்வியை தழுவினர். அமமுக – தேமுதிக கூட்டணி படுதோல்வி அடைந்தது தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அமமுக முன்னாள் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பரமசிவன் ஐயப்பன் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மகன் பிரபாகரன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
ஆரம்பத்தில் திமுகவில் இருந்த பரமசிவ ஐயப்பன் கடந்த 2006 முதல் 2011 வரை மாவட்ட கவுன்சிலராக இருந்தார். பின்னர் 2011 உள்ளாட்சி தேர்தலிலும் மாவட்ட கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டிடிவி தினகரனின் ஆதரவாளராக இருந்த பரமசிவ ஐயப்பன் அமமுகவில் இணைந்தார். பின்னர் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியிலும், நாங்குநேரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு கணிசமான வாக்குகள் பெற்றார். என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமமுகவின் வேட்பாளர்களில் ஒருவர் கட்சி மாறியிருப்பது டிடிவி தினகரன் தரப்பை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.