
கருங்குளம் ஒன்றிய அமமுக நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தெற்கு காரசேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(40). பாளையங்கோட்டையில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். மேலும், பழைய கார்களை உடைத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கருங்குளம் ஒன்றிய அ.ம.மு.க. நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல பணியை முடித்துவிட்டு கடையில் இருந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல், வீட்டுக்குள் நடந்து சென்ற அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு டிடிவி.தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்;- தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு திரு.வே.சுப்பிரமணி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த துயரமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வே.சுப்பிரமணி படுகொலைக்கு காரணமானவர்களை காவல்துறையினர் விரைந்து கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். தலைநகர் சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் படுகொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சமூக விரோதிகள் சுதந்திரமாக சுற்றித் திரியக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. காவல்துறையும் அதனை கையில் வைத்திருக்கும் முதலமைச்சரும் இப்போதாவது விழித்துக்கொள்ளவில்லை என்றால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை மிக மோசமாகிவிடும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.