அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்? திமுக எதிராக கொந்தளிக்கும் ஆழ்வார்பேட்டை ஆண்டவர்.!

By vinoth kumarFirst Published Oct 23, 2021, 1:51 PM IST
Highlights

ஏழை எளியவர்களின் பசியாற்றும் இந்த திட்டத்தை முந்தைய ஆட்சியாளர்களை விட சிறப்பாக செயல்படுத்துவதே அரசுக்கு பெருமை தருவதாக இருக்க முடியும். அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாக செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

சிறிய நட்டத்தை காரணம் காட்டி இத்தகைய நல்ல திட்டங்களை சிதைப்பது மக்கள் நலன் நாடும் அரசுக்கு அழகல்ல என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஏழை எளிய மக்களின் பசியாற்று மையங்களாகத் திகழ்கின்றன அம்மா உணவகங்கள். இங்கே மலிவு விலையில் வழங்கப்படும் உணவுகளை நம்பி வாழ்வோரின் எண்ணிக்கை கொரோனாவிற்கு பிறகு பன்மடங்கு பெருகியுள்ளது. தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களால் ஈர்க்கப்பட்டு அவற்றை தங்கள் மாநிலங்களிலும் செயல்படுத்த சில மாநில அரசுகள் முயன்று வருகின்றன. திமுக அரசும் அம்மா உணவகங்களை கைவிடும் எண்ணமில்லை என அறிவித்திருந்தது. ஆனால் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இரவு நேர உணவு முறையில் மாற்றம் செய்துள்ளதாகவும், பணியாட்களை குறைத்து வருவதாகவும் வெளியாகும் தகவல்கள் கவலையளிக்கின்றன.

அம்மா உணவகங்களில் இரவு உணவுக்கு, சப்பாத்தி தயாரிக்கப்பட்டு வந்தது. இது அரசு மருத்துவமனை நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், முதியோருக்கு பயனுள்ளதாக இருந்தது. மேலும் அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் திடீரென பணிநீக்கமும், பணியிட மாற்றமும் நிகழ்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு வாயிலாக இதை நிறைவேற்றியிருப்பதாக சொல்கின்றன ஊடகங்கள்.

இந்த நடைமுறை மாற்றங்களுக்கு அம்மா உணவகம் நட்டத்தில் இயங்குவதே காரணம் என்கிறார்கள். சென்னை மாநகராட்சி தன் வருவாயை பெருக்கிக் கொள்ள பல வழிகள் இருக்கையில், சிறிய நட்டத்தை காரணம் காட்டி இத்தகைய நல்ல திட்டங்களை சிதைப்பது மக்கள் நலன் நாடும் அரசுக்கு அழகல்ல, இத்திட்டத்தின் கீழ் பலனடையும் பணியாளர்கள், பயனாளிகள் அனைவருமே சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உணவு மனிதர்களின் அடிப்படை உயிர் ஆதார விசைகளில் ஒன்றாக இருக்கும் போது அதை குறைந்த விலையில் தரும் திட்டத்துக்கு செலவு செய்ய அரசு அமைப்புகள் தயங்கவே கூடாது, அம்மா உணவகத்திட்டம் பெயர் மாற்றப்படாமலே சிறப்பாகத் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் வரும் செய்திகள் அந்த உறுதிமொழிக்கு எதிராக உள்ளன. ஏழை எளியவர்களின் பசியாற்றும் இந்த திட்டத்தை முந்தைய ஆட்சியாளர்களை விட சிறப்பாக செயல்படுத்துவதே அரசுக்கு பெருமை தருவதாக இருக்க முடியும். அம்மா உணவகம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் சிறப்பாக செயல்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

click me!