எடப்பாடியார் மாவட்டத்திலேயே இப்படியோரு சம்பவமா? எரிமலையாய் வெடிக்கும் ஓ.பன்னீர்செல்வம்..!

By vinoth kumarFirst Published Nov 28, 2021, 1:26 PM IST
Highlights

திமுகவினரின் கட்டுப்பாட்டில் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இதன்மூலம் அரசாங்க நடவடிக்கைகளில் திமுகவினர் தலையிடுகிறார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாக உறுதி செய்யப்படுகிறது. அண்ணா வழியில் ஆட்சி நடப்பதாகக் கூறினாலும், அவருடைய கொள்கைகளுக்கு முரணான செயல்கள் தான் திமுக ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மக்கள் நினைக்கின்றனர்.

அம்மா மனி கிளினிக் பெயர் முதலமைச்சரின் மினி கிளினிக் என பெயர் மாற்ற செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக பெயர்ப்பலகை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என  ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- மாற்றத்தைத் தருவோம் என்று கூறிவிட்டு தேர்தல் முடிவுகள் வந்த 2வது நாளே முகப்பேர் பகுதியில் உள்ள அம்மா உணவகம் சூறையாடப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் திடீரென்று மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவரின் படத்தை ஒட்டியது என்ற வரிசையில் தற்போது சேலம் மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் என்ற பெயரை மாற்றியது என ஏமாற்றத்தை திமுக அரசு தந்து கொண்டிருக்கிறது.

சேலம் நவப்பட்டி ஊராட்சி பொது சேவை மையத்தில் இயங்கும் அம்மா மினி கிளினிக் என்ற பெயர் பலகையை எடுத்துவிட்டு முதலமைச்சரின் மினி கிளினிக் என்ற பெயர் பலகை வைத்ததோடு அந்த பெயர் பலகையில் தற்போதைய முதல்வர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாக பத்திரிகையில் புகைப்படத்துடன் செய்தி வெளிவந்துள்ளது. இது குறித்து மருத்துவ அதிகாரி ஒருவரிடம் விசாரித்த போது அரசு விதியை மீறி வைத்துள்ள பெயர் பலகையை அகற்றக் கோரி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், சுகாதாரத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஊராட்சி ஒன்றியத் தலைவரோ இது குறித்து ஊராட்சியில் எந்த அனுமதியும் பெறப்பட்டவில்லை என்றும் இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

இதிலிருந்து திமுகவினரின் கட்டுப்பாட்டில் அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இதன்மூலம் அரசாங்க நடவடிக்கைகளில் திமுகவினர் தலையிடுகிறார்கள் என்பதும் தெள்ளத் தெளிவாக உறுதி செய்யப்படுகிறது. அண்ணா வழியில் ஆட்சி நடப்பதாகக் கூறினாலும், அவருடைய கொள்கைகளுக்கு முரணான செயல்கள் தான் திமுக ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மக்கள் நினைக்கின்றனர்.

மேற்படி இடத்தில் பெயர் பலகை மாற்றம் செய்யப்பட்டு நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையில் இது தொடர்பான புகார் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில்  பெயர் பலகையை மாற்றவோ,  பெயல் பலகையை மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அரசு ஆணை இல்லாமல்  அந்த துறை தொடர்புடைய  அதிகாரிகளின் இசைவு இல்லாமல் எந்த அடிப்படையில்  இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டது? விளக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு. அரசாங்க அலுவலகத்தில் உள்ள பெயர் பலகைகளை எந்த ஆணையும் இல்லாமல், அதிகாரிகளின் இசைவு இல்லாமல் யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என்றால் அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்பதுதான் பொருள்.

மேற்படி இடத்தில் அம்மா மினி கிளினிக் என்ற பெயர் பலகை முதலமைச்சரின் மினி கிளினிக் என்று மாற்றப்பட்டதற்கு யார் காரணம்? இந்தப் பெயர் பலகை மாற்றத்திற்கான நிதி யாரால் கொடுக்கப்பட்டது என்பதையெல்லாம் ஆராய்ந்து சட்டத்திற்கு புறம்பாக பெயர் பலகை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அங்கே மீண்டும் அம்மா மினி கிளினிக் என்ற பெயர் பலகை பொருத்தப்பட வேண்டும் என்பதுதான் அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு பெயர் பலகை மாற்றியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மீண்டும் அம்மா மினி கிளினிக் என்ற பெயர் பலகை அங்கே பொருத்தப்படவும் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். முனனாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!