எல்லாப் பக்கமும் கேட் போட்டா எப்படி..? அப்புறம் நம்ம மோடி கோட் போட்டு சுற்றமுடியாதே என்கிற வருத்தத்தை தமிழக பாஜக நிர்வாகிகளின் செயல்பாடுகளும், கருத்துக்களும் அலுப்பை ஏற்படுத்தி வருகிறது.
எல்லாப் பக்கமும் கேட் போட்டா எப்படி..? அப்புறம் நம்ம மோடி கோட் போட்டு சுற்றமுடியாதே என்கிற வருத்தத்தை தமிழக பாஜக நிர்வாகிகளின் செயல்பாடுகளும், கருத்துக்களும் அலுப்பை ஏற்படுத்தி வருகிறது. திரைப்படங்களை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில் தான் திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள், விவாதங்கள், கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு மற்றும் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு வரும் திரைப்படங்களில் உண்மைக்கு புறம்பாகக் கருத்துகள் வந்தால் அதை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எந்த தவறும் இல்லை. சில இடத்திலே பாரதிய ஜனதா கட்சி நம்முடைய கண்டனங்களையும் கடுமையாக பதிவும் செய்திருக்கிறது.
திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குநரின் கற்பனையின் வெளிப்பாடு. அவர்கள் பார்த்த படித்த மற்றும் கேள்விப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் உருவாகிறது. நமது கட்சி சகோதர, சகோதரிகள் சில நேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.
கட்சியில் முக்கியப்பதவியில் இருக்கும் யார் சொல்லும் கருத்தும் கட்சியின் கருத்தாக மாறுகின்ற சூழல் இருக்கிறது. அது நிறைய நேரத்தில் நமது கட்சியின் கருத்தாக மாறிவிடுகிறது. எப்பொழுது எதற்காக பேச வேண்டுமோ அப்பொழுது பேச வேண்டும் பேசக்கூடாத நேரத்தில், பேசுவதை தவிர்க்க வேண்டிய இடத்தில் பேசாமல் இருப்பது அதைவிட முக்கியமான அரசியல் நயம்.
நமது இலக்கு, நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு, நமக்கு முன் இருக்கும் சவால்கள் இவற்றை மனதில் கொண்டு கவனமாகச் செயல்படுங்கள். எனவே திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விமர்சனங்கள் விவாதங்கள் கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் சிலர், ‘’ எல்லா நடிகர்களையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். மாநாடு படத்தை சிலர் எதிர்த்தனர். அது கமர்சியல் திரைப்படம். ஆனால், ஜெய் பீம் வரலாற்று உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஆகையால் தேவையில்லாமல் அதிக ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களின் படங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என அண்ணாமலை நினைக்கிறார். இதை இப்படிக் கூட எடுத்துக் கொள்ளலாம். சூர்யாவுக்கு எதிர்ப்பு. சிம்புவுக்கு மன்னிப்பா?’’ எனத் தெரிவித்து வருகின்றனர்.