அதிகார திமிரில் பேசுகிறார் அமித்ஷா... பாஜக அமைச்சர்கள் முன்னிலையில் சீறிய வைகோ!

By Asianet TamilFirst Published Nov 28, 2021, 7:51 PM IST
Highlights

சில நாட்களுக்கு முன்னால், உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவுக்கு ஒரே  மொழி இந்திதான்; உள்துறை அமைச்சகத்தின் கோப்புகள் முழுமையும் இப்போது இந்தியில்தான் எழுதுகிறோம் என்று அதிகாரத் திமிரோடு கூறி இருக்கிறார்.

இந்தியைத் திணிக்க முயன்றால், இந்தியா பல நாடுகளாகச் சிதறி விடும். கூட்டு ஆட்சித் தத்துவத்தை ஒழிக்க முனைகின்ற அரசு, காணாமல் போய்விடும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளதையடுத்து மத்திய அரசு சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார். மத்திய அமைச்சர்கள் பிரகாலாத் ஜோஷி, பியூஷ் கோயல் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ பங்கேற்று இக்கூட்டத்தில் பேசினார். 

 “இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இதுவரை இல்லாத அளவில் விவசாயிகள் போராட்டத்தில் உயிர் இழந்த 750 விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். விவசாயிகள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் தங்கள் உடைமைகளை இழந்திருக்கிறார்கள். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பொதுமக்கள், போராட்டம் நடத்திய விவசாயிகளை ஆதரித்தார்கள். எனவேதான், இந்த மூன்று வேளாண் பகைச் சட்டங்களையும் இந்திய அரசு திரும்பப் பெற்றது. அதன்படி, குளிர்காலக் கூட்டத் தொடரில் முதல் நாளே வர வேண்டிய மசோதா இது. ஆனால், பத்தாவது இடத்தில் இடம் பெற்று இருக்கிறது. எம்.எஸ். சுவாமிநாதன் குழு அளித்த அறிக்கையின்படி, விளைபொருள்களுக்கு உரிய விலையை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இந்தியா ஒரு கூட்டு ஆட்சி நாடு. ஆனால், கூட்டு ஆட்சித் தத்துவத்தையே தகர்த்துத் தரைமட்டமாக்க நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு வேலை செய்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என இந்தியாவை ஒரு சர்வாதிகார நாடாக்கத் துணிந்து விட்டார்கள். தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் எரிமலையாக வெடித்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், இணையற்ற ஜனநாயகவாதி, ஜவகர்லால் நேரு, மக்கள் விரும்புகிறவரை, இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும் என உறுதியளித்தார்.

ஆனால், சில நாட்களுக்கு முன்னால், உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவுக்கு ஒரே  மொழி இந்திதான்; உள்துறை அமைச்சகத்தின் கோப்புகள் முழுமையும் இப்போது இந்தியில்தான் எழுதுகிறோம் என்று அதிகாரத் திமிரோடு கூறி இருக்கிறார். அப்படித் திணிக்க முயன்றால், இந்தியா பல நாடுகளாகச் சிதறி விடும் என எச்சரிக்கிறேன். இந்த அக்னிப் பரீட்சையில், கூட்டு ஆட்சித் தத்துவத்தையே ஒழிக்க முனைகிற இந்த அரசு காணாமல் போய்விடும்” என்று வைகோ பேசினார். 

tags
click me!