இந்தி மொழியை திணிக்க முயற்சிக்கிறீர்களா..? இந்தியா துண்டு துண்டாக சிதறிவிடும்... வைகோ எச்சரிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Nov 28, 2021, 6:20 PM IST
Highlights

இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு. ஆனால், கூட்டாட்சித் தத்துவத்தையே தகர்த்துத் தரைமட்டம் ஆக்க, நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு வேலை செய்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். 
 

இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு. ஆனால், கூட்டாட்சித் தத்துவத்தையே தகர்த்துத் தரைமட்டம் ஆக்க, நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு வேலை செய்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். 

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி இன்று காலை ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார். அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “இந்தியா விடுதலை பெற்ற பிறகு, இதுவரை காணாத அளவில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த 750 விவசாயிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் தங்கள் உடைமைகளை அவர்கள் இழந்திருக்கிறார்கள். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை மக்கள், போராட்டம் நடத்திய விவசாயிகளை ஆதரித்தனர்.

எனவே, இந்த மூன்று வேளாண் பகைச் சட்டங்களையும் இந்திய அரசு திரும்பப் பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் உறுதி கூறினார். அதன்படி, நடைபெற இருக்கின்ற இந்தக் குளிர்காலக் கூட்டத் தொடரில் முதல் நாளே வர வேண்டிய மசோதா, பத்தாவது இடத்தில் இடம்பெற்றிருக்கிறது. எம்.எஸ். சுவாமிநாதன் குழு கொடுத்த அறிக்கையின்படி, விளைபொருட்களுக்கு விலை உரிய விலையை, அரசு உறுதிசெய்ய வேண்டும். இந்தியைத் திணிக்க முயல்வதாக மத்திய அரசுக்குக் கண்டனமும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு. ஆனால், கூட்டாட்சித் தத்துவத்தையே தகர்த்துத் தரைமட்டம் ஆக்க, நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு வேலை செய்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று, ஒரு சர்வாதிகார நாடு ஆக்கத் துணிந்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் எரிமலையாக வெடித்தது. எனவே, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர், இணையற்ற ஜனநாயகவாதி, பண்டித ஜவாஹர்லால் நேரு, மக்கள் விரும்புகின்றவரை, இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும் என உறுதிமொழி கொடுத்தார்.

ஆனால், சில நாட்களுக்கு முன்னர், உள் துறை அமைச்சர் அமித் ஷா, ‘இந்தியாவுக்கு ஒரே மொழி இந்திதான்; உள் துறை அமைச்சகத்தின் கோப்புகள் முழுமையும் இப்போது இந்தியில்தான் எழுதுகிறோம்’ என்று அதிகாரத் திமிரோடு கூறியிருக்கிறார். அப்படித் திணிக்க முயன்றால், இந்தியா பல நாடுகளாகச் சிதறிவிடும் என எச்சரிக்கிறேன். இந்த அக்கினிப் பரீட்சையில், கூட்டாட்சித் தத்துவத்தையே ஒழிக்க முனைகிற இந்த அரசு காணாமல் போய்விடும்” என்று வைகோ கூறினார்.

click me!