"எவருக்காவது வீரம் இருந்தால், பூணூலை வெட்ட வாங்க" என்று காங். செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் பூணூல் அணிந்தபடி தனது புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் நிறுவப்பட்டிருந்த புரட்சியாளர் லெனின் சிலை பாஜகவினரால் அகற்றப்பட்டது. சிலை அகற்றப்பட்டதுற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் எழுப்பி வந்த நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழகத்தில் உள்ள பெரியாரின் சிலை அகற்றப்படும் என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவுக்குப் பிறகு அவருக்கெதிராக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. திருப்பத்தூரில் இருந்த தந்தை பெரியார் சிலை பாஜக நிர்வாகி ஒருவரால் சேதப்படுத்தப்பட்டது., இந்த நிலையில், சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகத்தை சார்ந்த சிலர், பூணூல் அறுக்கும் செயலில் ஈடுபட்டனர். இது குறித்து சென்னை, ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த 4 பேர்
நேற்று சரணடைந்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான அமெரிக்கை நாராயணன், தைரியம் இருந்தா பூணூலை வெட்ட வாங்க பார்க்கலாம் என்றும் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளதாவது.
எவருக்காவது வீரம் இருந்தால், இந்த நேரம், இடத்தில் என் பூணூலை வெட்ட வரட்டும்..., அவன் முதலில் என் முஸ்லீம், கிறிஸ்துவ, இந்து தலித் மற்றும் பிற இந்து நண்பர்களைக் கடந்து என்னிடம் வருவதற்குள் அவன் தடுக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டிருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.