காலம் அவரை பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன் குரல்..!! ஸ்டாலின் உருக்கம்..!!

By Ezhilarasan BabuFirst Published Sep 25, 2020, 5:07 PM IST
Highlights

 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியதுடன், பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பிரபல நடிகர்களுக்கு மாற்றுக் குரல் கொடுத்தும், பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி.பி.

காலம் அவரை பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன் குரல் என எஸ்.பி.பி மறைவு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது. காலம் அவரை பிரித்தாலும், காற்றில் தவழ்ந்து கொண்டிருக்கிறது அவரது தேன் குரல், என்றும் இளமை மாறாத அந்த இனிய குரல் தந்த பாடல்களால் என்றென்றும் உயிர்த்திருப்பார் இறவாப் புகழ்கொண்ட பாடகர் எஸ்.பி.பி அவர்கள். 

 

பரபரப்பான உலகில் மக்களின் மன அழுத்தத்திற்கு இயற்கையான மருந்து எஸ்.பி.பி. கொரானா கொடுங்காலம் நம்மிடமிருந்து அற்புத இசை கலைஞனை பிரித்துவிட்டது. 16 இந்திய மொழிகளில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியதுடன், பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பிரபல நடிகர்களுக்கு மாற்றுக் குரல் கொடுத்தும், பல்துறை வித்தகராக விளங்கியவர் எஸ்.பி.பி. 

பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பல மாநில அரசுகள், திரைப்பட விருதுகளால் பெருமை பெற்றவர் எஸ்.பி.பி. முத்தமிழறிஞர் கலைஞரின் அன்பிற்குரியவர் எஸ்.பி.பி - தம்பி அவரை பிரிந்து வாடும் தம்பி சரண் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையில் இருக்கும் ரசிகர்களுக்கும் திமுக சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நம்மை விட்டு பிரிந்து விட்டார் என்பதை ஏற்க மனம் மறுக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார். 
 

click me!