ஆட்டோ ஓட்டுநர்களுக்காக பரிந்து பேசிய தினகரன்..! அரசிடம் அதிரடி கோரிக்கை..!

By Manikandan S R SFirst Published May 20, 2020, 3:36 PM IST
Highlights

கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். அரசிடமிருந்து சிறப்பு உதவிகள் எதுவும் கிடைக்காமல் பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள்  இதன் மூலம் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட முடியும்

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் உச்சம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,448 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 7,466 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 4,895 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 84 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கி இருக்கிறது. தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,672 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு தற்போது 4ம் கட்டத்தை எட்டியுள்ளது. மே 31ம் தேதி வரை ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுரைப்படி பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கும் 25 மாவட்டங்களில் போக்குவரத்து உள்ளிட்ட ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் ஆட்டோக்கள் ஓட்டுவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இதனிடையே ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கும்  அனுமதி அளிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலர் டிடிவி.தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிபந்தனைகளுடன் ஆட்டோக்களை இயக்குவதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். அரசிடமிருந்து சிறப்பு உதவிகள் எதுவும் கிடைக்காமல் பொது முடக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுனர்கள்  இதன் மூலம் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட முடியும். எனவே, தமிழக அரசு உடனடியாக இதனைப் பரிசீலித்து அறிவிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

click me!