அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமூக நீதியின் கொள்கை... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

By Narendran SFirst Published Jan 4, 2023, 8:17 PM IST
Highlights

அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமூக நீதியின் அடிப்படையான கொள்கை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமூக நீதியின் அடிப்படையான கொள்கை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக சென்னை அண்ணாநகரில் உள்ள அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் சென்னை இலக்கியத் திருவிழா 2023ஐ முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, வேறு எந்த மாநிலங்களிலும் இப்படியான இலக்கியத் திருவிழாக்கள் நடக்கிறதா, அதில் கல்லூரி மாணவர்களுக்கு இப்படியான போட்டிகளை, பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறார்களா எனத் தெரியவில்லை. முதலமைச்சர்  தலைமையிலான திராவிட மாடல் அரசு இங்கு நடப்பதால்தான் இதெல்லாம் சாத்தியமாகிறது.  

இதையும் படிங்க: கிராமிய கலைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமிதம் - முதல்வர் ஸ்டாலின்

நம் மொழியின் இலக்கிய செழுமையை, அதன் மரபை கொண்டாடும் வகையில் ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று கடந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில்  முதலமைச்சர் அறிவித்தார். நம் நதி நாகரிக மரபு அடிப்படையில் வைகை, காவிரி, பொருநை மற்றும் சிறுவாணி என நான்கு இலக்கிய திருவிழாக்களும், சென்னையில் ஒரு இலக்கியத் திருவிழாவும் நடத்த முடிவு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதல் நிகழ்வாக ‘பொருநை இலக்கிய திருவிழா திருநெல்வேலியில் கடந்த நவம்பர் 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.  அடுத்து சென்னை இலக்கியத் திருவிழா வரும் 6 முதல் 8ம் தேதி வரை 3 நாட்கள் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது.  

இதையும் படிங்க: விஜிலென்ஸில் பிடித்து கொடுத்துவிடுவேன்… தரமற்ற குடியிருப்புகளை கட்டிய ஒப்பந்ததாரரை விளாசிய ஆட்சியர்!!

இதில் 100 இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில், பல்வேறு அமர்வுகளில் பங்குபெறுகிறார்கள். தமிழகத்தின் கலை இலக்கிய வரலாற்றையும், நம் பண்பாட்டையும், அடுத்தத் தலைமுறையினரிடம் எடுத்துச்சென்று அவர்கள் மூலம் அதை உலகம் அறியச் செய்வதற்கான இந்த முயற்சி நிச்சயமாக வெற்றிபெறும். தமிழ்நாடு அரசு நடத்தும் இலக்கியத் திருவிழாக்கள் தமிழ் மக்களின் கொண்டாட்டத்துக்கு உரிய நிகழ்ச்சியாக கொண்டு செல்லப்பட வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமூக நீதியின் அடிப்படையான கொள்கை. அதை சரியாக செய்துவிட வேண்டும் என்பதுதான் தமிழக முதல்வரின் இடைவிடாத எண்ணம். அதைநோக்கித்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆகவே மாணவர்கள் உற்சாகத்துடன் இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்தார். 

click me!