அழகிரி எப்படி பேரணி நடத்துறாருன்னு பார்ப்போம் !! சவால் விடும் செயல் தல !!

By Selvanayagam PFirst Published Aug 23, 2018, 1:47 PM IST
Highlights

ஸ்டாலினுக்கு எதிராக வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையில் பேரணி நடத்தவுள்ளதாக மு.க.அழகிரி அறிவித்துள்ள நிலையில் அவர் எப்படி பேரணி நடத்துவார் என பார்ப்போம் என ஸ்டாலின் சவால் விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த 7 ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்துக்குப் பிறகு மு.க.அழகிரியை திமுகவில் இணைத்துக் கொள்ள உறவினர்கள் பலரும் ஸ்டாலினை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் அழகிரியை கட்சியை விட்டு நீக்கியது கருணாநிதி எடுத்த முடிவு, அதில் தலையிட முடியாது என ஸ்டாலின் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கருணாநிதி இறந்த மூன்றாவது நாளே செய்தியாளர்களை சந்தித்த அழகிரி, தொண்டர்கள் என் பக்கம்தான் உள்ளனர். தனது அடுத்த நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன் என திரி கொளுத்திப் போட்டார்.

இந்நிலையில் காலியாக உள்ள திமுக தலைவர் பதவியில்  வரும் 28 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுகுழுவில் ஸ்டாலின் தேர்ந்தேடுக்கப்பட்டு அமர வைக்கப்படுவார் என தெரிகிறது.

அதே நேரத்தில் மு.க.அழகிரியும் கட்சித் தலைமையை கைப்பற்ற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. தனது பலத்தை நிரூபிப்பதற்காக வரும் செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் பேரணி நடத்த அழகிரி முடிவு செய்துள்ளார். திருவல்லிக்கேணியில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

இதற்காக திமுக தலைமை நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்களுடன் அழகிரி தொடர்ந்து பேசி ஆதரவு திரட்டி வருவதாக கூறப்படுகிறது. மேலும்  ஸ்டாலினால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்கள், அதிருப்தியில் இருப்பவர்களை அழகிரியின் பக்கம் இழுக்க அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அதிருப்தியில் உள்ளவர்களுக்கு அழகிரி ஆதரவாளர்கள் தொடர்ந்து கடிதம் எழுதி வருகின்றனர்.

இதையடுத்து  மாவட்டச் செயலாளர்கள் மீது அதிருப்தியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள் பலர் அழகிரி நடத்தும் பேரணியில் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு, ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் சென்னையில் அழகிரி நடத்தும் பேரணியில் திமுக நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்றும் அதிருப்தியில் உள்ள கட்சியினரை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரத்தில்  திருவாரூர் மற்றும்  திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சி உடையாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அழகிரி நடத்தும் பேரணியை டம்மியாக்க அனைத்து வேலைகளையும் உடன் பிறப்புகள் அதி தீவிரமாக செய்து வருகின்றனர். அழகிரியின் பேரணியை ஆஃப் பண்ண உடன் பிறப்புகள் ரெடி !! 

click me!