ஜெயலலிதா சிலையைப் பராமரிக்க அனுமதி கேட்ட அதிமுக... நாங்களே நல்ல முறையில் பராமரிப்போம் என்ற திமுக அரசு..!

By Asianet TamilFirst Published Oct 21, 2021, 10:12 PM IST
Highlights

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலையை உரிய முறையில் தமிழக அரசே பராமரிக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலையை சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, காமராஜர் சாலையிலுள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலையினை நிறுவிட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் அவருடைய பிறந்தநாளன்று மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக முந்தைய அதிமுக அரசால் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மூலமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்டத் தலைவர்கள், வீரர்கள், தியாகிகள் உள்ளிட்டவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களின் போது மட்டுமே அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை செய்யப்படும் நடைமுறையானது ஆண்டுடாண்டு காலமாக தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பாக நிறுவப்பட்டுள்ள எந்தவொரு தலைவரின் சிலைக்கும் அரசின் சார்பாக தினசரி மாலையிடும் வழக்கம் இல்லை. இனி வருங்காலங்களிலும் அன்னாரின் பிறந்த நாளன்று ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு அவருடைய பிறந்த நாளான பிப்ரவரி 24 அன்று தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மாநில உயர்கல்வி மன்ற வளாகத்திலுள்ள ஜெயலலிதா திருவுருவச் சிலையினை அதிமுக சார்பில் பாராமரிக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


ஜெயலலிதாவின் திருவுருவச்சிலையும் அதைச் சுற்றியுள்ள இடமும் பொதுப்பணித் துறையால் சுத்தம் செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. அரசின் சார்பில் சிலை மற்றும் நினைவகங்கள் யாவும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உரிய முறையில் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஆதலால், இந்நேர்வில் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் வழங்கிடும் நடைமுறை இல்லாத நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை அரசின் சார்பில் தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்கப்படும்” என்று பொன்முடி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!