அதிமுக எம்பி கார் மீது வெடிகுண்டு வீச்சு..! அதிர்ச்சியில் எம்பி மற்றும் அவரது குடும்பத்தினர்..!

By T BalamurukanFirst Published Nov 24, 2020, 9:42 PM IST
Highlights

நாகர்கோவில் அதிமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடும் சூழ்நிலையில்  அதிமுக எம்.பி. விஜயகுமார் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

நாகர்கோவில் அதிமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடும் சூழ்நிலையில்  அதிமுக எம்.பி. விஜயகுமார் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் விஜயகுமார். இவரது வீடு, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சிதம்பரநாதன் தெருவில் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் விஜயகுமார் டெல்லி புறப்பட்டு சென்றார். அவரது கார் வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல் இன்று காலை அவரது கார் டிரைவர் வந்தார். அப்போது வீட்டின் முன் பகுதியில் திடீரென பந்து போன்ற ஒரு உருளையான பொருள் கிடந்துள்ளது.

சந்தேகத்தின் பேரில் அதன் அருகில் சென்ற போது அதில் வெடி மருந்துடன், திரியும் இணைக்கப்பட்டு வெடிமருந்து நிரப்பி, அதை தீ வைத்து, வீட்டின் முன் நின்ற கார் மீது வீசி உள்ளனர். ஆனால் அது எதிர்பாராதவிதமாக வெடிக்காமல் அப்படியே இருந்துள்ளது. இது பற்றிய தகவலை விஜயகுமார் எம்.பி.க்கு தெரிவித்துள்ளனர் குடும்பத்தினர். உடனே அவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

இதனையடுத்து, டி.எஸ்.பி. வேணுகோபால் மற்றும் நேசமணிநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்களும் சென்று சோதனை நடத்தினர். இந்த வெடிகுண்டு வெடித்திருந்தால் அந்த பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும். காரும் தீப்பிடித்து எரிந்து இருக்கும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து நேசமணிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.பி. வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

click me!