காலியாக உள்ள அமைச்சர் பதவிக்கு போட்டி... அதிமுக எம்எல்ஏ திடீர் யாகம்?

By vinoth kumarFirst Published Jan 23, 2019, 10:03 AM IST
Highlights

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், அமைச்சர் பதவிக்காக யாகம் நடத்தியதாக பரவிய தகவலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், அமைச்சர் பதவிக்காக யாகம் நடத்தியதாக பரவிய தகவலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வழக்கில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா சிறைத் தண்டனை பெற்றார். இதனால் அவரது அமைச்சர் பதவி காலியானது. அவர் வகித்து வந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை கூடுதல் பொறுப்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அந்தப் பதவியைப் பிடிக்க ராஜன் செல்லப்பா ஆர்வம் காட்டிவருவதாக தகவல் வெளியானது. இதற்காக சென்னையில் முகாமிட்டு வருகிறார் அந்த மதுரை எம்.எல்.ஏ.. ஆனால், மதுரைக்கு ஏற்கனவே இரண்டு அமைச்சர்கள் இருப்பதால், மூன்றாவதாக அதே மாவட்டத்துக்கு பதவி தரக் கூடாது என்று கட்சி மேலிடத்தில் மூத்த அமைச்சர்கள் கூறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் மறுபுறம் அந்த துறைக்கான அமைச்சர் பதவி பெற, தோப்பு வெங்கடாசலம் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை அருகே திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நேற்று காலை பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏவும், சட்டமன்ற  நிதி மதிப்பீட்டுக்குழு தலைவருமான தோப்புர் வெங்கடாசலம்  ‘கந்த யாகம்’ எனும் சிறப்பு யாகத்தில் ஈடுபட்டார். இது பதவி, அதிகார வாழ்க்கை மேம்பாட்டுக்கான சக்தி தரும் யாகம் என கூறப்படுகிறது. 

முன்னதாக, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 2 முறை தோப்பு வெங்கடாசலம் அமைச்சராக இருந்து வந்தார். கடந்த வாரம் தலைமைச்செயலகத்தில் முதல்வர் பதவியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதாக கூறி வந்த நிலையில் தற்போது அமைச்சர் பதவியை பிடிக்க வேண்டும் என கோயிலில் தோப்பு வெங்கடாசலம் யாகம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!