அதிமுக அமைச்சர்களின் ஊழல் புகார் உள்துறை அமைச்சகம் கையில்.. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பகீர் தகவல்..!

By vinoth kumarFirst Published Feb 19, 2021, 6:34 PM IST
Highlights

அரசியல் சட்டத்துக்குட்பட்டு தனக்குள்ள அதிகாரத்தின்படி நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறினார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். 

அரசியல் சட்டத்துக்குட்பட்டு தனக்குள்ள அதிகாரத்தின்படி நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறினார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார். 

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைக் கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தித்தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார்கள் அடங்கிய மனு ஆளுநரிடம் அளிக்கப்பட்டது.

அப்போது கொடுக்கப்பட்ட பட்டியலில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டை வைத்திருந்தனர்.

முதல் கட்டமாக முதல்வர் பழனிசாமி மீதான வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் மீது ஊழல் புகார் பட்டியல் தமிழக ஆளுநரிடம் கொடுக்கப்பட்டது. 2018ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிட வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேநேரம் இரண்டாவது பட்டியலும் தயாராகி வருகிறது, கூடிய விரைவில் இரண்டாவது பட்டியலும் ஆளுநரிடம் அளிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவந்தார். 

இந்நிலையில், 2வது அதிமுகவின் ஊழல் பட்டியலை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் ஆளுநரிடம் வழங்கினர். ஆளுநரை சந்தித்த பின் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அரசியல் சட்டத்துக்குட்பட்டு தனக்குள்ள அதிகாரத்தின்படி நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் கூறினார். 5 அமைச்சர்கள், ஒரு எம்எல்ஏ மீது ஆதாரத்துடன் 9 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. திமுக சார்பில் ஏற்கனவே தந்த புகாரை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருப்பதாக ஆளுநர் தெரிவித்தார். திமுக முதலில் தந்த புகார் பட்டியலை படித்துக் கொண்டிருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்தார் என துரைமுருகன் கூறியுள்ளார். 

click me!