அதிமுக பொதுக்குழு வழக்கு.. இந்த ஜட்ஜ் வேண்டாம்.. வேறு ஜட்ஜை கோரும் ஓபிஎஸ் தரப்பு.!

By vinoth kumarFirst Published Aug 3, 2022, 1:44 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது. வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தலைமை நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனு அளித்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது. வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தலைமை நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனு அளித்துள்ளது. 

ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வம் தொடந்த வழக்கு மற்றும் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், சட்டப்படி பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம், விதிகளை மீறினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்தப்பட்டு இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுக பொதுகுழுவுக்கு அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்த அதிகாரம் இல்லை என்பதால் பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி வழங்கிய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.  பொதுக் குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும். வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்குகளை நாளை முதல் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தரப்பு வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்கள்.

 அந்த மனுவில் அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கூடாது. வேறொரு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அந்த மனுவில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஏற்கனவே பிறப்பித்து உத்தரவில் ஜனநாயகத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான் மேலோங்கி இருக்கும், பெரும்பான்மையானவரின் விருப்பத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. கட்சி  உறுப்பினர்களின்  நம்பிக்கை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சியின் மூத்த தலைவர்கள், உறுப்பினர்களை சமாதானம் செய்து கட்சியின் நலன் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் உறுப்பினர்களை நம்பிக்கை பெரும் வகையில் பொதுக்குழுவை அணுகுவதை  விடுத்து, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடுகிறார். எனவே நீதிமன்றத்தின் மூலம் சாதிக்க முயற்சிக்கிறார் என்றும் தெரிவித்திருந்தப்பாக வழக்கிற்கு  சம்மந்தமில்லாத கருத்துகளை தெரிவித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். எனவே வேறு நீதிபதிக்கு வழக்கின்  விசாரணை மாற்ற வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

click me!