நீட் பற்றி சொல்லாமலேயே போயிருக்கலாம். .இது விளக்கமா ? உதயநிதியை கலாய்த்த விஜயபாஸ்கர் !!

By Raghupati RFirst Published Feb 11, 2022, 8:11 AM IST
Highlights

கரூர் பேருந்து நிலையம் அருகில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், ‘ஆட்சிக்கு வந்தவுடனேயே கொரோனா தொற்று பாதிப்பு, பெட் இல்லை. ஆக்ஸிஜன் இல்லை என்ற நிலை மாற்றப்பட்டது. கொரோனா நிதியாக ரூ.4 ஆயிரம், பெட்ரோல் விலை குறைப்பு, மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் என்று பல திட்டங்களும் நிறைவேற்றப்பட்டது. 

இல்லம் தேடி கல்வித் திட்டம் என்ற பெயரில் 2 ஆண்டாக பள்ளிகள் மூடப்பட்டு பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியை மேம்படுத்த திட்டம் கொண்டுவரப்பட்டது. நம்மை காக்கும் திட்டம், சாலை விபத்துகளில் சிக்கியவர்களுக்கு 48 மணி நேரத்துக்கு இலவச மருத்துவ சிகிச்சை, மின்சாரத்துறையில் 24 மணி நேரமும் புகார் அளிக்கும் வகையில் சேவை மையம் என பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 

நீட் தேர்வை ரத்து செய்யும்விதமாக, சட்டப்போராட்டத்தில் நம் முதல்வர் தளபதியின் அரசு ஈடுபட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம்.கவர்னர் திருப்பி அனுப்பிய ஒரு வாரத்தில் மீண்டும் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம். நிச்சயம் தமிழ்நாட்டின் நலனுக்காக சொல்வதை செய்து முடிப்போம்’ என்று பேசினார்.

கரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது பேசிய அவர், ‘ தொடர்ந்து 10 வருடம் ஆட்சியில் இருந்த நிலையில், ஒரு மாற்றம் வேண்டுமென்று புதிய வாக்காளர்கள் போட்ட வாக்குகளால் தற்போதைய திமுக அரசு ஆட்சி அமைத்துள்ளது. 

3 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சி அமைத்து, தற்போது மக்களுக்கு பணம் கொடுத்தால் வாக்குகள் வாங்கி விடலாம் என்று தேர்தல் வியூகத்தில் கையாள்கின்றனர். பொங்கலுக்கு சென்ற ஆண்டு, அதிமுக அரசு ரூ 2 ஆயிரத்து 500 கொடுத்தோம். ஆனால், தற்போதைய திமுக அரசு வெறும் ரூ 100 கூட கொடுக்கவில்லை. 

அன்று உதயநிதி மற்றும் கனிமொழி ஆகியோர்கள் ரூ 5 ஆயிரம் தர வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்கள். இந்த ஊரில் ஒரு மந்திரி இருக்கின்றார். அவர் ஏற்கனவே அதிமுகவிலும் இருந்தவர், அரவக்குறிச்சி தொகுதியில் எம்.எல்.ஏ வாக நிற்கும் போது, ஜெயித்த பிறகு 25 ஆயிரம் நபர்களுக்கு 2 செண்ட் நிலம் தருவேன் என்று சொன்னார். ஆனால் பின்னர் எதுவும் தரவில்லை. இங்கே தற்போது அமைச்சராக இருந்தும் ஆள் இல்லை. கொள்ளையடிப்பதற்கு கோவைக்கு சென்று விட்டார்.

தமிழக முதல்வரின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கரூர் வந்து பிரச்சாரம் செய்துள்ளார். அப்போது நீட் தேர்வு ரத்து ரகசியம் என்ன என்று இங்கு சொல்கின்றேன் என்று கூறி விட்டு, நீட் தேர்வு ரத்து என்னவென்றால் கடைசி வரை போராடுவது தான் என்று கூறி விட்டு சென்றுள்ளார். இதனை எல்லோரும் கலாய்த்து வருகின்றனர். இந்த பதிலை உதயநிதி சொன்னதற்கு சொல்லாமல் சென்று இருக்கலாம் என்று கூறி உதயநிதி ஸ்டாலினை  கலாய்த்தார்.

click me!