திமுகவில் சேரச்சொல்லி மிரட்டுறாங்க.. செந்தில்பாலாஜி மீது நீதிமன்றத்தில் பிராது கொடுத்த அதிமுக நிர்வாகி.!

By Asianet TamilFirst Published Dec 1, 2021, 10:04 PM IST
Highlights

 "என்னையும், கரூர் மாவட்ட அதிமுகவினரையும் திமுகவில் சேருமாறு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டாயப்படுத்தி வருகிறார். அவருடைய அழைப்பை ஏற்க மறுக்கும் அதிமுகவினர் மீது பொய் வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டுகின்றனர்."

கரூரில் திமுகவில் தன்னை சேரச்சொல்லி மிரட்டுவதாக அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு சேர அழுத்தம் கொடுக்கிறார்கள் என்ற புகார்கள் வந்ததுண்டு. கட்சியில் சேர சொல்லி மிராட்டுகிறார்கள் என்று வாய் வார்த்தை புகாரோடு சிலர் நிற்பதுண்டு. ஆனால், கரூர் ரெட்டிபாளையத்தைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர் மதுசூதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவே தாக்கல் செய்துவிட்டார். அந்த மனுவில், “நான் கரூர் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ளேன். என்னையும், கரூர் மாவட்ட அதிமுகவினரையும் திமுகவில் சேருமாறு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கட்டாயப்படுத்தி வருகிறார்.

அவருடைய அழைப்பை ஏற்க மறுக்கும் அதிமுகவினர் மீது பொய் வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டுகின்றனர். போலீஸாரும் திமுகவினரின் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருக்கிறார்கள். அமைச்சர் செந்தில்பாலாஜி, அவருடைய சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தூண்டுதலின் பேரில் திமுகவில் இணையும்படி என்னை போலீஸாரை வைத்து கட்டாயப்படுத்தினார்கள். திமுகவில் சேர மறுத்தால், என் மீது போதை பொருள் கடத்தல் வழக்குப்பதிவு செய்வதாகவும் மிரட்டினார்கள். நவம்பர் 15 அன்று போலீஸார் என் வீட்டுக்கு வந்து ஒரு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்தனர். சரியாக காரணம் சொல்லாததால் விசாரணைக்கு செல்ல மறுத்துவிட்டேன்.

இதனால், என் மீது பொய் வழக்குப்பதிவு செய்வதற்கு வாய்ப்புள்ளது என அச்சமாக உள்ளது. எனவே, என்னை தொந்தரவு செய்யக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்.” என்று மனுவில் மதுசூதன் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, “மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டுகளுடன் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது” என்று நீதிமன்றம் கூறி, அவருடைய மனுவை தள்ளுபடி செய்தது.

click me!