AIADMK :நேற்று அன்வர் ராஜா.. இன்று யார்..? பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூடுகிறது ''அதிமுக' செயற்குழு..

By Raghupati RFirst Published Dec 1, 2021, 8:33 AM IST
Highlights


பரபரப்பான சூழ்நிலையில் இன்று  கூடுகிறது அதிமுக செயற்குழு. அன்வர் ராஜா நீக்கம்,சசிகலா விவகாரம் போன்றவை விவாதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தநிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் 2-வது முறையாக இன்று நடக்கிறது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. கடந்த மாதம் 24ம் தேதி, அதிமுக மாவட்ட செயலர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம்  நடந்தது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கட்சியினர் இடையே கடும் விவாதம் நடந்தது. பன்னீர்செல்வம் - பழனிசாமி இடையிலும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது கட்சி நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் - முன்னாள் எம்.பி அன்வர் ராஜா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு மேலும் பரபரப்பை உண்டாக்கியது. நேற்று அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்படுகிறார்  என்று அதிமுக தலைமை அறிவித்தது.இன்று நடைபெறும் கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள்  செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 270 பேர் கலந்துகொள்ள இருக்கின்றனர். காலியாக உள்ள அதிமுக அவைத்தலைவர் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. 

ஏற்கனவே அதிமுகவில் “ஒற்றை தலைமை” என்ற கோஷம்  வலுத்து வருவதால், அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிர்வாகிகளுக்கு இடையே நிலவிவரும் அதிருப்திக்கு மத்தியில் அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடுவதால், கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் சலசலப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. குறிப்பாக அன்வர் ராஜா நீக்கம், சசிகலா விவகாரம் தொடர்பாக பேசப்படும் என்று கூறப்படுகிறது.இந்த செயற்குழு கூட்டம் திரைப்படத்தை போல எந்தவித பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என்று கூறலாம்.

 

click me!