தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் தொடர்ந்து தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், பொங்கல் தொகுப்புக்கான கரும்பு, வெல்லம், துணிப்பை ஆகியவை கொள்முதல் செய்ததில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில், மக்களுக்கு பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஏற்கெனவே அறிவித்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் ரேஷன் கடைகள் மூலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மக்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் பொங்கல் பரிசுத்தொகுப்புகள் தரமானதாக இல்லை என்று அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘தமிழகத்தில் பொங்கல் பரிசுப்பொருட்கள் மக்களுக்கு தரமற்றாதாக கொடுக்கப்பட்டு வருகிறது. ரவைகளில் வண்டுகள் இருப்பதாகவும், 21 பொருட்கள் கொடுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 18 பொருட்கள் மட்டுமே கொடுப்பதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர்.பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இரண்டரை டன் வெல்லம் மோசமாக இருக்கின்றது. சேலத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் வெல்லமானது தரமற்று இருப்பதற்கான ஆதாரம் உள்ளது.
பொங்கல் பரிசுப்பொருட்கள் தரமற்று இருப்பதாக பல்வேறு செய்தி தொலைக்காட்சிகள் தெரிவித்து வருகின்றன. மக்களுக்கு கொடுக்கும் பொருட்கள் எடை குறைவாக இருப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களே பொருட்கள் எடை குறைவாக இருப்பதாக போராட்டம் நடத்தியுள்ளனர். தரமற்ற பொருட்களால், மக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். எனவே, மக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுப்பொருட்களை அரசு தரமானதாக வழங்க வேண்டும். மக்களுக்கு தரமற்ற, கொட்டுப்போன பொருட்களை வழங்கக்கூடாது’ என்று கூறினார்.
ரேஷன் கடைக்கு போய் ஆய்வு பண்ணினாரா என்று கேட்டவர்களுக்கு கடை எண்ணுடன் பதில் கொடுத்த எடப்பாடியார் pic.twitter.com/6h7UY2cyXL
— இந்திராணி சுடலைமுத்து M.Sc.,LLB (@IndiraniSudala1)மேலும் பேசிய அவர், ஏற்கனவே சொன்னது போல தரமற்ற வெல்லம் எந்த கடையில் வழங்கப்பட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அது சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள 107 ஓமலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், செவ்வாய் சந்தை நியாய விலைக்கடை எண் எப்.டி 002 பி.என்.வி.எஸ்.பி.2 கடையில் தரமற்ற வெல்லத்தை வழங்கி இருக்கிறார்கள்.இதனை எப்படி பயன்படுத்த முடியும்’ என்று ஆளுங்கட்சிக்கு பதில் அளித்து இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.