அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது மத்திய மண்டல ஐ.ஜி.யிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள கீழகுமரேசபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருண்பிரசாத். இவரது மனைவி மார்க்ரெட் ஜெனிபர்.இவருக்கு வயது 33. இவர் நர்சிங் படித்துள்ளார். இந்நிலையில் தனக்கு அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.4 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஜெனிபர் அளித்த புகாரின்பேரில், அதிமுக நிர்வாகிகளான கிருஷ்ண சமுத்திரத்தைச் சேர்ந்த லாசர், தேனீர்பட்டியைச் சேர்ந்த வீரமலை, சூரியூரைச் சேர்ந்த சுப்பிரமணி ஆகியோர் மீது சில மாதங்களுக்கு முன் துவாக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்களில் லாசர் மட்டும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஜெனிபர் மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணனிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதுகுறித்து ஜெனிபர் பேசியா போது, ‘லாசர் உள்ளிட்ட 3 பேரும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தைக் காட்டித்தான் என்னிடம் பணம் கேட்டனர். எனக்கு கடந்த 2020-ம் ஆண்டு லாசர், வீரமலை, சுப்பிரமணி ஆகியோர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சொல்லி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ .4,00,000 வாங்கி சென்றனர்.
அதைக் கொடுத்ததும், திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தற்காலிகமாக வேலை வாங்கிக் கொடுத்து ஏமாற்றிவிட்டனர்’ என்றார். இந்த வழக்கில் தொடர்புடைய லாசர் . வீரமலை, சுப்பிரமணி மற்றும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், புதிய விசாரணை அதிகாரியை நியமித்து என் வீட்டின் பத்திரத்தை வைத்து நான் வழங்கிய ரூ .4,00,000த்தை மீட்டு தருமாறு திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஐஜி பாலகிருஷ்ணனிடம் இன்று காலை தனது கைக்குழந்தையுடன் மற்றும் கணவர் ஆகியோருடன் புகார் மனு அளித்தார்.
இம்மனு குறித்து விசாரணைநடத்த திருச்சி மாவட்ட போலீஸாருக்கு ஐ.ஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே முன்னாள் அதிமுக அமைச்சர் ஆவின் முறைகேடு புகாரில் சிக்கி, தற்போது சிறையில் இருக்கிறார். அடுத்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவாரோ என்ற தகவல் வெளியாகி உள்ளது.