சினிமா உலகில் கமல் மற்றும் ரஜினிக்கு நடுவில் ஆயிரம் போட்டிகள் இருந்திருக்கலாம். ஆனால் அவை வெளியே தெரியவில்லை. ஆனால் அரசியலில் முதல் புள்ளி வைக்கும் முன்னரேயே இருவருக்குள்ளும் போட்டி போட்டுக் கிளப்புகிறது.
தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்த சில நாட்களிலேயே பரபரவென பணிகளை துவக்கி கமலஹாசன் கட்சியே துவக்கியதில் ரஜினிக்கு பெரிய வருத்தம் உண்டு. இந்நிலையில் ரஜினியை வெகுவாக உரசிப்பார்த்து வெகு சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தார் கமல்ஹாசன்.
இந்நிலையில் கமல் விஷயத்தில் வெகுவாக பொறுத்துப் போன ரஜினி இப்போது மளமளவென ரேஸில் குதிக்க துவங்கிவிட்டார். காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தை வைத்து கமல்ஹாசன் ஆயிரம் அரசியல் செய்து கொண்டிருந்த நிலையில் அமைதியாக இருந்துவிட்டு கடைசி நாளன்று, தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு ட்விட்டை தட்டிவிட்டு ஆட்டத்தை தன் பக்கம் திருப்பினார்.
அதேபோல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக கருத்து சொல்லிக் கொண்டிருந்த கமல் இன்று நேரடியாக அங்கு சென்று மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தருவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தூத்துக்குடிக்கு கமல்ஹாசன் ப்ளைட் ஏறி, டேக் ஆப் ஆகும் முன் ட்விட்டரில் ஸ்டெர்லைட் பற்றி கருத்துக்களை பதியவிட்டு மீண்டும் கமலுக்கு போட்டியாக தன்னை பரபரப்பாக்கி இருக்கிறார் ரஜினி.
தன்னுடைய ட்விட்டில்...
“தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் 47 நாட்களாக போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தொழிற்சாலை நட்டத்த அனுமதி கொடுத்த அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வேடிக்கை பார்ப்பது, புதிராக உள்ளது.” என்றிருக்கிறார்.
கமல் தூத்துக்குடிக்கு செல்லும் முன் ரஜினியின் ட்விட் உலகம் முழுக்க சுற்றி கவனம் ஈர்த்துவிட்டது. ரஜினியின் இந்த வேகம் கமலை கடுப்பாக்கி இருக்கிறது! என்கிறார்கள்.
ஆனாலும் சபாஷ் சரியான போட்டிதான்!