இரட்டை இலை சின்னத்தை மீண்டும் தங்கள் அணிக்கு பெறும் முயற்சியில் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்பது டி.டி.வி.தினகரன் மீதான குற்றச்சாட்டு.
இந்த வழக்கின் விசாரணைக்காக டெல்லியில் ஆஜரான டி.டி.வி.டி. மற்றும் அவரது உதவியாளர்களிடம் மூன்று நாட்களாக விசாரணை நடத்தியது டெல்லி போலீஸ். சரிவர தூங்க கூட நேரம் தராமல் தொடர் விசாரணை நடந்ததால், ‘இப்டி வெச்சு செய்றாங்களே!’ என்று புலம்பியிருக்கிறது தினகரன் டீம். முதல் இரு நாட்களும் கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு கூட செம சாமர்த்தியமாக பதில் தந்து கொண்டிருந்த தினகரன், இரண்டாவது நாள் இரவில் மிகவும் சோர்ந்துவிட்டாராம்.
தூக்கமில்லாத நிலை அவரை ரொம்பவே அனத்தியிருக்கிறது. மூன்றாவது நாளும் தொடர் விசாரணை நீண்டபோது தினகரனால் சோர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. ‘என்கிட்டே என்னதான் எதிர்பார்க்கிறாங்க?’ என்று தனது வழக்கறிஞர்களிடம் நொந்திருக்கிறார்.
அதன் பிறகான விசாரணையில் தினகரனின் பதில்களில் தடுமாற்றமும், முன்னுக்கு பின் முரணான வார்த்தைகளும் வந்து விழுந்ததாக டெல்லி சோர்ஸ் தெரிவிக்கிறது. சுகேஷை தெரியவே தெரியாது என்று முதல் நாளில் கூலாக மறுத்தவர், மூன்றாவது நாட்களில் அதற்கு எதிர்மாறான பதிலை தந்ததாகவும் தகவல்.
தினகரன் சார்பாக இந்த வழக்கில் ஆஜராகும் டெல்லி வழக்கறிஞர் குழுவில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் உண்டு. அவர்கள் மூன்றாவது நாள் விசாரணைக்குப் பின் தினகரனிடம் ‘அரெஸ்ட் ஆகாமல் சென்னை திரும்புவோம் அப்படின்னு நீங்க நம்ப வேண்டாம் சார்.
கைது மனநிலைக்கு தயாராகிடுங்க. அதற்கான வாய்ப்பு அதிகமிருக்குது.’ என்று வெளிப்படையாகவே சொல்லிவிட, அவரும் பெரிதாக வருத்தத்தில் அலட்டிக் கொள்ளாமல் சரியென்று தலையாட்டிவிட்டாராம்.
ஆக நான்காவது நாளன்று ‘எப்போ கைது செய்வாங்க? டெல்லி ஜெயிலுக்குள்ளே ஓவர் சூடா இருக்குமா? அரசியல் கைதியா ட்ரீட் பண்ணுவாங்களா எப்படி?’ என்று அட்வான்ஸ்டாக யோசித்து கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டாராம் டி.டி.வி.
கைதுக்கு காத்திருந்துதான் கைதாகியிருக்கிறார் தினகரன்!