ஐநூறு ரூபாய் கட்டை டிப்ஸாக கொடுத்த ஆளுங்கட்சி வி.வி.ஐ.பி: பதறித் தெறித்து ஓடிய டிரைவர்!

By Vishnu PriyaFirst Published Feb 6, 2020, 12:45 PM IST
Highlights

இதைக் கேட்டு ஏக குஷியாகிவிட்டாராம் அந்த வி.வி.ஐ.பி. வழக்கமாக தான் போகும் காரை ஓரங்கட்டிவிட்டு, இம்போர்டட் கார் ஒன்றை கேட்டிருக்கிறார். அவசரத்துக்கு ஒரு பெரிய கம்பெனியிலிருந்து கோடி மதிப்பிலான ஒரு காரை அவசர தேவைன்னு சொல்லி கடனாக வாங்கி வந்திருக்கின்றனர். 

தமிழகத்தை ஆளும் கட்சியை சேர்ந்த சில வி.வி.ஐ.பி.க்கள் சிலருக்கு என்னதான் ஆச்சுன்னே தெரியலை. ஒரு எல்லை தாண்டி ஓவரோ ஓவராக குதித்துக் கொண்டிருக்கிறார்கள். வாய்ப்பேச்சிலும் சரி, செயல்களிலும் சரி இவர்களின் கூத்து எக்குத் தப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இதெல்லாம் முதல்வர் மற்றும் துணை முதல்வரின் கவனத்துக்குப் போக, அவர்கள் அத்தனை அமைச்சர்கள் மற்றும் கழகத்தின் வி.வி.ஐ.பி.க்களை அழைத்து லெஃப்ட் அண்டு ரைட்டு வாங்கிவிட்டனர். ’ஒழுங்கா துறை வேலைகளை மட்டும் பாருங்க. பிடிக்கலேன்னா ஆட்சியை கலைச்சுட்டு போங்க, எனக்கு ஒண்ணும் வருத்தமில்லை. அமைச்சர் பதவி மற்றும் முக்கிய பதவிகளில் ஒக்காந்து வாய்க்கு வந்தபடி பேசி, கட்சி மற்றும் ஆட்சி பெயரை அசிங்கப்படுத்தாதீங்க!’ என்று எவ்வளவோ அட்வைஸ் செய்துவிட்டார்கள். ஆனாலும் சிலர் இன்னமும் அடங்குவதாக தெரியவில்லை. இத்தனைக்கும் கடந்த வாரம் முதல்வரின் ஓவர் பரேடுக்கு ஆளான வி.வி.ஐ.பி. ஒருவர் கொஞ்சம் கூட மாறவில்லையாம். சொல்லப்போனால் இப்போது ரொம்பவே அதிகமாக துள்ள துவங்கியுள்ளாராம். ஜோதிடம், ஜாதகம், பூஜை, யாகம், பரிகாரம் ஆகியவற்றில் ஓவர் நம்பிக்கை உடைய மனிதர் அவர். சமீபத்தில் அவரது ஆஸ்தான சாமியார் அவருக்கு ஸ்பெஷல் அருளாசி ஒன்றை சொல்லி, ‘உன் கட்சி காணாமல் போனாலும் போகும். ஆனால் நீ அரசியல்ல இப்ப இருக்கிறதை விட ஓவர் உச்சத்துக்கு போகப்போற!’ என்று சொல்லியிருக்கிறார். 

இதைக் கேட்டு ஏக குஷியாகிவிட்டாராம் அந்த வி.வி.ஐ.பி. வழக்கமாக தான் போகும் காரை ஓரங்கட்டிவிட்டு, இம்போர்டட் கார் ஒன்றை கேட்டிருக்கிறார். அவசரத்துக்கு ஒரு பெரிய கம்பெனியிலிருந்து கோடி மதிப்பிலான ஒரு காரை அவசர தேவைன்னு சொல்லி கடனாக வாங்கி வந்திருக்கின்றனர். அந்த காரை ஈசிஆர் சாலையில் இங்கிட்டும் அங்கிட்டுமாக ரெண்டு மூணு தடவை ரவுண்டு அடிக்க சொல்லியிருக்கிறார் நள்ளிரவில்.தானே கையோடு எடுத்து வந்திருந்த பென் டிரைவிலிருந்த பழைய பாடல்களை செம்ம சவுண்டாக அலறவிட்டபடி சாயந்து உட்கார்ந்து ஜாலியாக வலம் வந்திருக்கிறார். இந்த சவாரி போரடித்ததும், வண்டியை நிறுத்த சொல்லிவிட்டு இறங்கியிருக்கிறார். பின் தன் காருக்கு போனவர், ஏதோ ஒரு ஞாபகத்தில் திரும்பி வந்து, அந்த காஸ்ட்லி காரின் டிரைவரை அழைத்து அவரது பெயர் உள்ளிட்ட விபரங்களை கேட்டுவிட்டு ‘யப்பா நல்லா ஜம்முன்னு ஓட்டுறேய்யா’ என்று தோளில் தட்டி பாராட்டிவிட்டு, தன் வேட்டி பாக்கெட்டில் கையை விட்டு ஐநூறு ரூபாய் கட்டு ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்து ‘டிப்ஸா வெச்சுக்க’ என்றாராம். பதறிப்போன அந்த டிரைவர்...’சார் அதெல்லாம் வேணாம். உங்களுக்கு கார் ஓட்டுனதே பெருமை. இதெல்லாம் வாங்கினா எங்க ஓனர் வேலையை விட்டு தூக்கிடுவாரு!’ என்று அழாத குறையாக மறுத்திருக்கிறார். 

ஆனால் இவரோ ‘யாரு உன் ஓனர்ட்ட போயி சொல்லப்போறாங்க. அப்படியே இவனுங்க எவனாச்சும் (தன் உதவியாளர்கள்) போட்டுக் கொடுத்து உனக்கு வேலை போனாலும், என் கிட்ட வா நான் தர்றேன் உனக்கு சுப்பர் சம்பளத்துல வேலை! இந்த கருப்பு ஆடுகளை நான் பார்த்துக்குறேன்.’ என்று சொல்லிவிட்டு பணத்தை திணித்துவிட்டு நடந்திருக்கிறார். பணக்கட்டுடன் கும்பிடாத குறையாக டிரைவர் நிற்க, தன் காரை நோக்கி வி.வி.ஐ.பி. நடக்க, அவரது காரிலிருந்து ‘அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே!’ன்னு பாட்டு போடாததுதான் குறை. இந்த விவகாரம் அப்படியே முதல்வரின் கவனத்துக்கு உளவுத்துறை மூலம் போயிருக்கிறது. பல்லை கடிக்கிறாராம் முதல்வர்.அது சரி, உளவுத்துறைக்கு தகவல் சொன்ன அந்த கருப்பு ஆடு யாருய்யா?

tags
click me!