
கோவை முன்னாள் மேயரும் முன்னாள் எம்எல்ஏவுமான மலரவன் அதிமுகவிலிருந்து விலகி தீபா பேரவையில் இணைந்து ரத்தத்தின் ரத்தங்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இது கோவை மாவட்ட சமாச்சாரம். இதே போன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் அதிமுகவின் நிர்வாகிகள் சிலர் தீபா பேரவையில் இணைந்துள்ளதுடன் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோரை அதிமுகவிலிருந்து அழைத்து வந்து ஜெ. தீபா பேரவையில் இணைத்து விடுகின்றனர்.
அவர்கள் சொல்கிற தகவல்படி இதுவரை 35,000 பேர் ஜெ. தீபா பேரவையில் இணைந்துள்ளதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாக அதிமுக எதிர்கோஷ்டியினர் மார்தட்டி கொளவதால் தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி மெல்ல கரைந்து கொண்டு செல்கிறதோ என்ற ஐயம் தங்களுக்கு எழுவதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர் அதிமுக கழக விசுவாசிகள் சிலர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரையன்ட் நகர் 43வது வார்டை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் ஒட்டுமொத்தமாக தீபா பேரவையில் இணைந்துள்ளனர்.
பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள கனி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இனைப்பு விழாவில் அதிமுக இளைஞர் அணியை சேர்ந்த முருகேசன்,சுந்தர்,ரமேஷ்,பேச்சியம்மாள், உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரும்
திரேஸ்புரம்,ஷன்முகநகர்,தாமோதர் நகர்,அண்ணா நகர், பகுதிகளை சேர்ந்த சுமார் 2000 பேர் கலந்து கொண்டு தீபா பேரவையில் இணைந்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஆறுமுகநேரியை சேர்ந்த வழக்கறிஞர் தொண்டன் சுப்ரமணியம் இதுவரை 35,000க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் தீபா பேரவையில் இணைந்துள்ளனர் என்றும் மேலும் பலர் தீபா பேரவையில் இணையவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதிமுகவை விட்டு விலகி ஜெ. பேரவையில் இணைந்துள்ளவர்கள் குறித்த முழு விபரமும் தன்னிடம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஜெ. தீபா பேரவை மட்டுமின்றி பாரதிய ஜனதா கட்சியிலும் அதிமுகவினர் இணைந்தார்கள் என்ற செய்தி தூத்துக்குடி உள்ளூர் செய்திதாள்களில் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அதிமுகவினர் தொடர்ந்து மாற்று கட்சிகளில் இணைந்து வருவது மிகவும் கவலைக்குரிய ஒரு விஷயம். இதனை உடனடியாக கட்சி தலைமை கவனத்தில் கொண்டு கட்சி கரைவதை தடுக்க வேண்டுமென ஆதங்கப்படுகிறார் மூத்த அதிமுக உறுப்பினர் ஒருவர்.
ஏற்கனவே பல மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் அதிருப்தி தொண்டர்களை சரிகட்டும் முயற்சிகளை ஒழுங்காக செய்யாததால் அதிமுக தலைமையிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து தொண்டர்கள் வேறு கட்சிகளுக்கு செல்வதால் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு தலைமையிடமிருந்து நிச்சயம் நெருக்கடி இருக்குமென தெரிகிறது. .