'நெஞ்சு வலிக்கிறது என்னால முடியல' ; போலீசிடம் கெஞ்சி மருத்துவமனையில் சேர்ந்த அதிமுக பிரமுகர்

By manimegalai aFirst Published Nov 19, 2021, 11:31 AM IST
Highlights

நெஞ்சு வலிப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ஆள்கடத்தல் வழக்கில் கைதான அ.தி.மு.க  பிரமுகர் டி.ஆர்.அன்பழகன்.

தர்மபுரி மாவட்டம் ‘ஆவின்’ கூட்டுறவு சங்க தலைவராக இருப்பவர்  டி ஆர். அன்பழகன். இவர் அதிமுகவில் விவசாய அணியின் மாவட்ட தலைவராகவும் உள்ளார்.இவருக்கு சொந்தமாக கல்குவாரி உண்டு.கடந்த ஆட்சி காலத்தில் சாலை ஒப்பந்ததாரராகவும் பல்வேறு பணிகளை மேற்கொண்டார்.பென்னாகரம், ஜெல்மாரம்பட்டியை சேர்ந்த பெரியசாமியின் மகன் முத்துவேல்,கிருஷ்ணன் மகன் சுரேஷ் ஆகியோர் இவரது கிரஷரில் வேலை பார்த்து வந்தனர். 

‘என்னுடைய கிரஷரிலேயே டீசல் திருடுகிறீர்களா’ என்று கேள்வி கேட்டு, இருவரையும் அடித்துள்ளார் அன்பழகன்.இருவரையும் உருட்டுக்கட்டை மற்றும் பைப்பால் சரமாரியாக தாக்கியுள்ளார்.மகனை காரில் கட்டத்தில் செல்வதை பார்த்த முத்துவேவின் தந்தை பெரியசாமி பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இவ்விசாரணையில், முத்துவேல் மற்றும் சுரேஷை அன்பழகன் தான் கடத்தினார் என்று உண்மை கண்டறியப்பட்டது.

அன்பழகன்,முருகன்,மகேந்திரன் ஆகிய 3 பேர் மீதும் ஆள் கடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், பயங்கர ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தி யது உட்பட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், டி.ஆர்.அன்பழகளை கொரோனா பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.அப்போது அவர், ‘எனக்கு நெஞ்சு வலிக்கிறது.என்னால நடக்க முடியல’ என்று கூற  உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காகதர்மபுரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். 

அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்கும் விதமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்மபுரி அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் 2 டிஎஸ்பி, 3 இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 40க்கும் போலீ சார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையின் முக்கிய வாசல் கதவுகள் அடைக் கப்பட்டு, போலீசார் தொடர்ந்து பாதுகாப்பில் ஈடுபட்டனர்.பிறகு  மேல்சிகிச்சைக்காக  ‘சேலம்’ அரசு மருத்துவமனைக்கு டி.எஸ்.பி சவுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார்.டி.ஆர்.அன்பழகனை ஆம்புலன்சில் அழைத்து சென்று சிகிச்சையில் சேர்த்தனர். 

கைதுக்கு பயந்துபோன அதிமுக பிரமுகர் டி.ஆர்.அன்பழகன் நெஞ்சுவலி என நாடகம் நடித்து வருவதாக பரவலாக பேசப்படுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட முயற்சி செய்தவர் தான், இந்த டி.ஆர்.அன்பழகன். இவர் முன்னாள்  ஒன்றிய குழு தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், ஜெ.பேரவை செயலாளர் போன்ற பல பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் இவர் பென்ளாகரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால், அதிமுக  கட்சி தலைமையோ இந்த தொகுதியை கூட்டணி கட்சியான  பாமகவுக்கு கொடுத்துவிட்டனர். 

பாமக சார்பாக மாநில தலைவர் ஜி.கே.மணி போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி, அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு நிழலாகவும்  இருந்து வந்துள்ளார் இவர். கல்குவாரி,அரசின் சாலை ஒப்பந்தப் பணிகள், கட்டிடப் பணிகள் என பல்வேறு ஒப்பந்தங்களை அதிமுக ஆட்சியில் செய்து வந்தார். அதிமுக ஆளுங்கட்சியாக இருந்த சமயத்தில், இவர் மீது பல்வேறு புகார்கள் மற்றும்  குற்றச்சாட்டுகள் எழுந்தது.ஆனால் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தான்,  தற்போது ஆள் கடத்தல் புகாரில் கைதாகியுள்ளார் டிஆர் அன்பழகன். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




 

click me!