
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தேர்தல் ஆணையம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இதையடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக உடைந்ததால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. சசிகலா தலைமையிலும் பன்னீர்செல்வம் தலைமையிலும் இரண்டு அணிகள் செயல்பட்டன.
சசிகலா சிறைக்கு சென்றபிறகு தினகரன் தலைமையிலும் பன்னீர்செல்வம் தலைமையிலும் அணிகள் செயல்பட்டன. அப்போது இரட்டை இலை சின்னத்தைப் பெற தினகரன் தரப்பும் பன்னீர்செல்வம் தரப்பும் போட்டி போட்டது. இரு அணிகளின் தரப்பிலும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தினகரன் தலைமையின் கீழ் செயல்பட்ட முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஆகியோருக்கு தினகரன் மீது அதிருப்தி ஏற்பட்டதை அடுத்து தினகரனை கழற்றிவிட்டு பழனிசாமி அணியும் பன்னீர்செல்வம் அணியும் இணைந்தன.
இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். தங்கள் தரப்பு வாதத்தையும் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தினகரன் தரப்பும் கோரியது.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக இரு அணிகளும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, முதல்வர் பழனிசாமி தரப்பில் கூடுதல் ஆவணங்களும் பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் தினகரன் தரப்பில் ஆவணங்களை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. கூடுதல் அவகாசம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
இதையடுத்து குறித்த நேரத்தில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக இறுதி விசாரணை நடந்த நிலையில், சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக நாளை தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்க உள்ளது.
அதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.