தொடர்ந்து Silent Modeயில் இருக்கும் கம்யூனிஸ்ட்..ஓ.பி.எஸ் கண்டணம்.. பதிலளிக்குமா பொதுவுடமை கட்சிகள்..

By Thanalakshmi VFirst Published Feb 14, 2022, 3:46 PM IST
Highlights

பிப்ரவரி மாதம்‌ வரை சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்‌ என்று முதலமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும்‌ பொதுவுடைமைக்‌ கட்சிகள்‌ இந்த விஷயத்தில்‌ மவுனம்‌ சாதிப்பது வியப்பாக இருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.
 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "2021 ஆம்‌ ஆண்டு அக்டோபர்‌ மற்றும்‌ நவம்பர்‌ மாதங்களில்‌ பெய்த மழையினால்‌ அறுவடைக்கு தயாராயிருந்த குறுவை பயிர்கள்‌ முழுமையாக சேதமடைந்த இடங்களில்‌ விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு 20,000 ரூபாய்‌ வழங்கப்படும்‌. என்றும்‌, நடப்பு சம்பா பருவத்தில்‌ நடவு செய்து நீரில்‌ மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறு சாகுபடி செய்திட ஏதுவாக ஹெக்டேர்‌ ஒன்றுக்கு 6,038 ரூபாய்க்கான இடுபொருட்கள்‌ வழங்கப்படும்‌ என்றும்‌ 16-11-2021 நாளைய அரசு செய்திக்‌ குறிப்பின்‌ மூலம்‌ தெரிவிக்கப்பட்டது. இதனைத்‌ தொடர்ந்து, சம்பா பருவத்தில்‌ பாதிப்படைந்த இளம்‌ பயிர்களுக்கு 6,038 ரூபாய்க்கான இடுபொருட்கள்‌ வழங்குவதற்குப்‌ பதிலாக நிதியாக வழங்கப்படும்‌ என்று 20-01-2022 நாளிட்ட செய்திக்‌ குறிப்பு வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

மேற்படி இழப்பீடு ' என்பது 15-11-2021 வரை பெய்த மழையினால்‌ பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கானது என்றும்‌, அதுவும்‌ "அண்மையில்‌ தான்‌ வழங்கப்பட்டது என்றும்‌, இதற்குப்‌ பிறகு, 2021 ஆம்‌ ஆண்டு டிசம்பர்‌, 2022 ஆம்‌ ஆண்டு ஜனவரி மாதங்களில்‌ பெய்த கனமழையின்‌ விளைவாக ஏற்பட்ட பயிர்ச்‌ சேதத்திற்கு இன்னமும்‌ இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும்‌, டிசம்பர்‌ மாதத்திற்கான பயிர்ச்‌ சேதம்‌ குறித்து அரசுக்கு தகவல்‌ அனுப்பப்பட்டும்‌ இழப்பீட்டிற்கான உத்தரவை இன்னும்‌ அரசு அளிக்கவில்லை என்றும்‌, சம்பா மற்றும்‌ தாளடி பருவத்தைப்‌ பொறுத்த வரையில்‌, பருவத்தின்‌ ஆரம்பகட்ட நிலையில்‌ கணக்கெடுக்கப்பட்டதால்‌ குறைந்த அளவு விவசாயிகளே பயனடைந்தனர்‌ என்றும்‌, அதற்குப்பின்‌ பெய்த மழையினால்‌ பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இடழிப்பீடும்‌ வழங்கப்படவில்லை என்றும்‌ விவசாயிகள்‌ கவலையோடு தெரிவிக்கின்றனர்‌. விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும்‌ பொதுவுடைமைக்‌ கட்சிகள்‌ இந்த விஷயத்தில்‌ மவுனம்‌ சாதிப்பது வியப்பாக இருக்கிறது.

பிப்ரவரி மாதம்‌ வரை சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்‌ என்பதும்‌, நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்கள்‌ மூலம்‌ அதிக அளவு நெல்‌ மூட்டைகள்‌ கொள்முதல்‌ செய்யப்பட வேண்டும்‌ என்பதும்‌ விவசாயிகளின்‌ எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே, முதலமைச்சர்‌ இதில்‌ உடனடியாகத்‌ தலையிட்டு, மழையினால்‌ சேதமடைந்த அனைத்துப்‌ பயிர்களுக்கும்‌ உரிய இழப்பீடு வழங்கவும்‌, நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்கள்‌ மூலம்‌ ஒரு நாளைக்கு குறைந்தபட்சம்‌ 1,500 நெல்‌ மூட்டைகளை கொள்முதல்‌ செய்யவும்‌, நெல்‌ மூட்டைகள்‌ மழையில்‌ நனையாமல்‌ இருக்கும்‌ வகையில்‌ அவற்றை உடனடியாக சேமிப்புக்‌ கிடங்குகளுக்கு அனுப்பவும்‌ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

click me!