
திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் பலர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. இதுமட்டுமின்றி, அதிமுகவில் ஒற்றைத் தலைமையாக ஓ.பன்னீர்செல்வம் வரவேண்டும் என சென்னையின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. இத்தகைய போஸ்டர்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் கிழிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
போஸ்டர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இது அக்கட்சியில் பெரும் மோதல்களை உண்டாக்கியுள்ளது. இதை அடுத்து அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தற்போது கட்சிக்குள் சூடுபிடித்துள்ளது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் தனித்தனியே தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த சூழலில் தனது ஆதரவாளர்களுடன் 4வது நாளாக ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னையில் ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தம்பி துரை, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் ஆலோசானை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 100 சதவீதம் திட்டமிட்டபடி வருகிற 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல் உண்மையில்லை. ஒற்றை தலைமை கோரிக்கை தவறு இல்லை. யார் வேண்டுமானாலும் வராலாம். ஒற்றை தலைமை குறித்து விவாதித்ததை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியே சொன்னதால் தான் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக சொல்வதில் உண்மை இல்லை. ஓ.பி.எஸ் தன் கருத்தை தான் கூறியுள்ளார். குற்றம்சாட்டவில்லை என்று தெரிவித்தார்.