
திருமங்கலத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘ மதுரை புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கோட்டையாகும் கழகத்தின் சார்பில் எந்த திட்டம் என்றாலும், மாநாடு என்றாலும், முதலில் ஆரம்பிப்பது இந்த மதுரையில்தான். சென்னையில் தலைமை கழகம் உள்ளதென்றாலும், மதுரை கழகத்தின் இதயபகுதி ஆகும்.
மதுரைக்கு பொறுப்பாளராக என்னை நியமனம் செய்த ஒருங்கிணைப்பாளர்கள் இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மதுரை மாவட்டத்திற்கு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா , எடப்பாடியார் ஆகியோர் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்கள் குறிப்பாக மதுரையில் 50 ஆண்டுகள் குடிநீர் பிரச்சனை இல்லாத வண்ணம் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது.
மதுரையில் 11 அம்மா உணவகங்கள், இரண்டு தடுப்பணைகள், வைகை ஆற்றுக்கு குறுக்கே இரண்டு பாலங்கள், ஆயிரம் கோடியில் ஸ்மார்ட் திட்டப்பணிகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் மதுரை மாவட்டத்திற்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை சொல்ல ஒரு நாள் போதாது சொல்லிக்கொண்டே போகலாம். தற்போது இரண்டு வடநாட்டு தொலைக்காட்சிகள் சர்வே எடுத்தது. அதில் இந்த 11 மாத திமுக ஆட்சி மிகவும் சரியாக இல்லை. திட்டமும் மக்களுக்கு கிடைக்கவில்லை.
அடித்தட்டு மக்கள் முதல் தொழில் செய்யும் மக்கள் வரை யாரும் நிம்மதியாக இல்லை. ஆனால் எடப்பாடியார் தலைமையிலான அம்மா ஆட்சி சிறப்பாக இருந்தது என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை மிரட்டி வெளியே விடாமல் திமுக கண்ட்ரோல் செய்துள்ளனர். இன்றைக்கு 80 சதவீத தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களை பாராட்டும்படி திமுக செய்து வருகிறது. மொத்தத்தில் திமுக விளம்பரத்தில் தான் ஆட்சி நடத்துகிறது எந்த திட்டமும் மக்களுக்கு போய சேரவில்லை.
தற்போது திமுக அரசு வீட்டு வரியை உயர்த்தி உள்ளது. இதே போல் 1998, 2008 ஆகிய திமுக ஆட்சி காலத்தில் வீட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது மக்களின் அத்தியாவசிய தேவையான ஆவின் பால் விலையை உயர்த்தியுள்ளனர். இன்றைக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ஒரு விளம்பர ஆட்சியாக தான் திமுக செயல்படுகிறது அதேபோல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம், அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று கூறினார்கள். சொன்னதை செய்யவில்லை அவர்கள்.
தேர்தல் வாக்குறுதி கொடுத்த எதையும் நிறைவேற்றவில்லை. இந்தி திணிப்பில் அண்ணாவின் கொள்கையில் அதிமுக உள்ளது. தற்போது இந்தி திணிப்பு சூழல் இல்லை. ஆனால், திமுக மத்திய அரசுடன் எதிர்ப்பு அரசியல் காட்டும் விதமாக செய்து வருகின்றனர் மக்களும் தெளிவாக புரிந்துள்ளனர். சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்று மீண்டும் அம்மா ஆட்சியை அமைப்போம். ஏனென்றால் இந்த 11 மாதகால ஆட்சியில் மக்கள் நன்மதிப்பை ஒரு சதவீதம் கூட திமுக பெறவில்லை’ என்று பேசினார்.