சசிகலா பக்கம் இழுக்கப்படும் முன்னாள் அமைச்சர்கள்..? மறுப்புகளும்.. வரிசைகட்டும் ஆடியோக்களும்..

By Thanalakshmi VFirst Published Dec 3, 2021, 3:37 PM IST
Highlights

சசிகலா தான் தலைமை ஏற்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாக வெளியான ஆடியோ , போலியானது என்றும் கழகத்தின் ஒற்றுமையை குழைக்க திட்டுமிட்டு செய்யப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, விடுதலைக்கு பின், நடந்து முடிந்த தமிழக சட்ட மன்ற தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பார் என்று பலர் எதிர்பார்த்த நிலையில், தான் அரசியலிலிருந்து ஒதுங்க இருப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்டார். அதிமுகவுடன் கைகோர்ப்பார் எனவும் டி.டி.வி தினகரன் தொடங்கிய அமமுக -வினை அதிமுகவுடன் இணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் அப்போது கூறப்பட்டு வந்தது.

அதனையடுத்து, அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலா மீண்டும் களமாட உள்ளார் எனவும், கட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளைத் தொடங்கிவிட்டார் அரசியல் வட்டாராங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தன. இதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தென்தமிழக மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

இதற்கிடையில், அதிமுக தொண்டர்கள் முதல் முன்னாள் எம்பிகள், அமைச்சர்கள் என பலர், சசிகலாவுடன் தொடர்ந்து உரையாடி வருவதாக கூறப்பட்டு வந்தது. மேலும் அதிமுக நிர்வாகிகள் சிலர், சசிகலாவுடன் உரையாடும் ஆடியோக்களும் அவ்வப்போது வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் சசிகலா தலைமையே விருப்பம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், கட்சிக்கான அடையாளம் அம்மாவிற்கு பிறகு சின்னம்மா என்று தானே இருக்கு என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு பதிலளித்துள்ள செல்லூர் ராஜு, “இருக்கு அப்படி தான் இருக்கு. நாங்களும் அதைத்தான் விரும்புகிறோம். அதற்கு முறைப்படி தான் போக வேண்டும். இல்லையென்றால் அவர்கள் கைப்பற்றி விடுவார்கள். காலம் கை மீறாத அளவிற்கு பார்த்துக்கொள்வோம்” என்று கூறியிருந்தார். இந்த ஆடியோ  சமுக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

இந்த நிலையில், சசிகலாவுக்கு தான் ஆதரவு தெரிவித்து பேசிய ஆடியோ பொய்யானது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “சசிகலாவுடன் நான் பேசுகிறேன் என்றால் ஊடகங்களிடம் அதை கூறியிருப்பேன் என்றும் அந்த செய்தி முழுக்க முழுக்க தவறானது” என்றும் கூறியுள்ளார். கழகம் ஒற்றுமையாக இருக்கும் நேரத்தில் வேண்டுமென்றே இதை செய்துள்ளார்கள் என்று கூறிய  அவர்,  கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும், நகர்ப்புற தேர்தலை முன்னிட்டும் இதை செய்துள்ளார் என்றார்.  மேலும் அது ஆளுங்கட்சியினரா அல்லது வேறு யாருடைய வேலையோ  என்று தெரியவில்லை என தெரிவித்தார். கட்சியின் ஒற்றுமையை பிடிக்காத சில விஷமிகள் இதுபோன்று செய்துள்ளதாகவும் கட்சி தலைமையிடம் கேட்டு முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், வாட்ஸ் அப்பில் என்னைப் பற்றி தவறான செய்தி வெளியாகி இருக்கிறது. நான் யாரிடமும் அப்படி பேசவில்லை. என் கருத்து என்பது, கட்சி ஒற்றுமையாக, வலுவாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றார். இதை பல முறை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறேன் எனவும் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, எங்களை விரும்பாதவர்கள், எங்கள் ஒற்றுமையை விரும்பாதவர்கள், இப்படி செய்து வருகிறார்கள் எனவும் ஆணிதரமாக கூறினார்.

இரண்டு நாட்களுக்கு முன் உடுமலை ராதாகிருஷ்ணன், கட்சியிலிருந்து நீக்கம் என்று செய்தி பரப்பினார்கள். இப்போது என்னைப் பற்றி பரப்பி வருகிறார்கள். பரபரப்புக்காக இப்படி செய்து வருகிறார்கள். நான் பேசியதாகச் சொல்லப்படும் ஆடியோவில் என்னைப் போன்று பேச முயற்சி செய்திருக்கிறார்கள். அது என் குரலே அல்ல. அதோடு இரவு ஒன்றரை மணிக்கு நான் ஒருவரிடம் பேசியதாக சொல்வதும் உண்மையல்ல. சின்னம்மா தலைமை தாங்க வேண்டும் என்று நான் நினைக்கவும் இல்லை. எந்த முடிவு எடுத்தாலும் அதை தலைமைதான் முடிவு பண்ண வேண்டும். நான் முடிவு பண்ண முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

click me!