
கடந்த 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டார். அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் ரேட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, மருத்துவமனை அமைந்துள்ள கிரீம்ஸ் ரேட்டில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர். ஆனால், இதுவரை யாரும், முதலமைச்சர் ஜெயல்லிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை.
பல்வேறு அரசியல் கட்சியினர், கவர்னர் உள்பட பலரும், அவர் சிகிச்சை பெறும் வார்டு அருகில் சென்று பார்த்துவிட்டு, டாக்டர்களிடம் சிகிச்சை பற்றி கேட்டறிந்து செல்கின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி சரியாக தெரியாததால் மனமுடைந்த அதிமுக கிளை செயலாளர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுக்கூரபேட்டையை சேர்ந்தவர் கணேசன் (50). கூலித் தொழிலாளி. அதிமுக கிளை செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி அஞ்சலை. இவர்களுக்கு குழந்தை இல்லை.
கடந்த சில நாட்களாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை என்று அக்கம்பக்கத்தினரிடம் வேதனையுடன் பேசி வந்துள்ளார்.
இதை தொடர்ந்து நேற்று மாலை வீட்டில் இருந்த கணேசன், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர்.
பின்னர், கணேசனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.