மே மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என்றும் அதிமுக – பாஜக கூட்டணி ஒன்றில்கூட வெற்றி பெறாது என்றும் ஏபிபி – சி-ஓட்டர்ஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்லில் அதிமுக 37 இடங்களையும், பாமக, பாஜக தலா ஒரு இடத்தையும் கைப்பற்றியது. திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறமுடியவில்லை.
இந்நிலையில் வரும் மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் திமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. திமுக, காங்கிரஸ், இடது சாரிகள், விடுதலைச்சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.
அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினகரனின் அமமுக சிறிய கட்சிகளுடன் இணைந்து தனித்து போட்டியிடும் என தெரிகிறது.
இந்நிலையில் ஏபிபி – சி-ஓட்டர்ஸ் நிறுவனங்கள் இணைந்து கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக 44 சதவீத வாக்குகளையும், அதிமுக 21 சதவீத வாக்குளையும், பாஜக 6.7 சதவீத வாக்குகளையும் பெறும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.