‘சாமி’களை நம்பாதீர்கள்... நடிகை ஸ்ரீபிரியாவின் ‘கன்னி’ பிரசாரம்!

By Asianet TamilFirst Published Apr 1, 2019, 10:42 AM IST
Highlights

தமிழகத்தில் உள்ள ஒரு சாமியையும் புதுச்சேரியில் உள்ள இரண்டு சாமிகளையும் நம்பாதீர்கள் என்று மக்கள் நீதி மய்யம் பிரச்சாகரும் நடிகையுமான ஸ்ரீபிரியா தெரிவித்தார்.

புதுச்சேரியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து நடிகை ஸ்ரீபிரியா பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “ புதுச்சேரியில் ஒரு பெண்  ஆளுநராக உள்ளார். அதனால் இங்கே பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அவரோ இங்கே உள்ள முதல்வருடன்  சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கே அவருக்கு நேரம் போதவில்லை.
புதுச்சேரியில் இரண்டு சாமிகள் (நாராயணசாமி, ரங்கசாமி) உள்ளனர். தமிழகத்தில் ஒரு சாமி (எடப்பாடி பழனிச்சாமி) உள்ளார். இந்தச் சாமிகளால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இந்தப் போலி சாமியார்களை மக்கள் யாரும் நம்பக் கூடாது.


மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு 13 மாதங்கள் ஆகிவிட்டன. கட்சி தொடங்கிய பிறகு இப்போதுதான் முதன் முறையாக தேர்தலை சந்திக்க உள்ளோம். புதுச்சேரியில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை அதிகம் நடந்துவருகிறது. அவர்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. பெண்களுக்கென தனி காவல் துறை, சொத்துரிமை, பெண்களுக்கு அனைத்திலும் சமபங்கு வேண்டுமென்றால், மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்கு அளியுங்கள். அதோடு பெண்கள் அரசியலுக்கு வாருங்கள். அரசியலை யாரும் தவிர்க்க வேண்டாம்.
பெண்கள் அரசியலை தவிர்த்தால் பொதுவாழ்வில் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் ஆட்சிக்கு வந்து விடுவார்கள். பெண்கள் நினைத்தால் சமூகத்தை மாற்ற முடியும்.  அந்த மாற்றத்தைக் கொண்டுவர மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவு தாருங்கள்.” என்று ஸ்ரீபிரியா பிரசாரம் செய்தார்.

click me!