
தயாரிப்பாளரும் இயக்குநர் சசிக்குமாரின் உறவினருமான அசோக்குமாரின் மறைவுக்கு நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் இதுவரை ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என தமிழ் திரையுலகினர் அதிருப்தியில் உள்ளனர்.
மெளனராகம், நாயகன் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த மிகப் பெரிய தயாரிப்பாளர் ஜிவி என அழைக்கப்படும் ஜி,வெங்கடேஸ்வரன். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பு கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டார். தற்போது அதே கந்துவட்டி கொடுமையால் மேலும் ஒரு தற்கொலையை சந்தித்திருக்கிறது தமிழ் திரையுலகம்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சசிகுமாரின் படத் தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்சன்ஸ் . நிறுவனத்தில் நிர்வாகியாகவும், சசிகுமாரின் படங்களின் இணை தயாரிப்பாளராகவும் இருந்த அசோக்குமார் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன், கந்துவட்டியால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மதுரை பைனான்சியர் அன்பு செழியனிடம் வாங்கிய பணத்துக்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு மேல் பல லட்சங்கள் வட்டியாக கொடுத்திருந்தும் தொடர்ந்து கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகவும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் கேவலமாக அன்பு செழியின் மிரட்டுவதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
கந்துவட்டி கொடுமை குறித்து திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து கருத்து கூறி வருகின்றனர். மேலும் அசோக்குமாரின் மறைவுக்கு இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான ரஜினியும், கமலும் இதுவரை இரங்கல் கூட தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். இதனால் தமிழ் திரையுலகினர் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.