
விஸ்வரூபம் திரைப்படம் குறித்த பிரச்சனைகளின்போது, கமல் ஹாசன் எதிர்த்து குரல் கொடுக்காமல், சிங்கம் குகையில் இல்லாதபோது குரல் கொடுப்பது ஏன் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிப்பு, சீரியல் தயாரிப்பு என பல பணிகளில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது அரசியல் களத்தில் நாங்களும் இருக்கிறோம் என தெரிவித்து வருகின்றனர் நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தன்னுடைய மனைவி ராதிகாவுடன் இன்று காலை சென்னை, கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்தார்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சரத்குமார், வாணியம்பாடியில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இலவசங்களை கொடுத்து மக்களை கெடுத்துவிட்டார்கள் என்றும், இதைவிட இலவச கல்வி, இலவச மருத்துவம் ஆகியவற்றை கொடுத்திருக்கலாம் என்றும் கூறினார்.
ஒரு லட்சம் கோடியில் புல்லட் ரயில் விடுவதை விட அனைத்து கிராமப்புறங்களிலும் மின்வசதியை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் அவர் மத்திய அரசை சாடினார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்தேன். இந்த சந்திப்பு, திமுக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக இல்லை; எம்.ஜி.ஆருக்குப் பிறகு எனக்கு அரசியல் கற்றுக் கொடுத்தவர் கருணாநிதி. அதற்காகத்தான் அவரை சந்தித்து நலம் விசாரித்ததாகவும் கூறினார்.
விஸ்வரூபம் திரைப்படம் குறித்து பிரச்சனைகள் வரும்போது கமல்ஹாசன் எதிர்த்து குரல் கொடுக்காமல் சிங்கம் குகையில் இல்லாதபோது குரல் கொடுப்பது ஏன் என்றும் சரத்குமார் கேள்வி எழுப்பினார்.