அதிரடி திருப்பம்.. சமூக நீதி காத்த அமைச்சர் சேகர் பாபு.. வானளவு புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Oct 30, 2021, 1:59 PM IST
Highlights

அமைச்சரின் இந்த செயல் அங்கிருந்த பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது, சமூகத்தில் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் அல்ல என்பதை தனது செயலின் மூலம் அவர் உணர்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்தலசயன பெருமாள் கோவிலில் முதல் பந்தியில் உணவு வழங்கவில்லை 

நரிக்குறவ பெண்ணுடன் அமர்ந்து  உணவருந்தி சமூக நீதியை காத்த அமைச்சர் சேகர்பாபு பாராட்டுக்குரியவர்  என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் மனமுவந்து பாராட்டியுள்ளார். அவரின் கருத்தை பலரும் வழிமொழிந்து வருகின்றனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் அதிரடியாக அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வருகிறது. அவைகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகின்றன. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பலரின் கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்,  தமிழில் அர்ச்சனை போன்ற அறிவிப்புகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளது. இந்த வரிசையில் இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழகம் 754 திருக்கோயில்களில் கோயிலுக்கு வழிபட வரும் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய மூன்று கோயில்களும் நாள் முழுவதும் அன்னதான திட்டம் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. இப்படியே அடுத்தடுத்து அதிரடியான திட்டங்களையும் நடவடிக்கைகளையும் இந்து சமய அறநிலைத்துறை எடுத்து வரும் நிலையில், சமீபத்தில் கோவில் அன்னதான பந்தியில் புறக்கணிக்கப்பட்ட நரிக்குறவ பெண்ணுடன் அமர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உணவு சாப்பிட்ட சம்பவம் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்று வருகிறது. 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே ஸ்தலசயனப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோயிலில் அன்னதான திட்டத்தின் கீழ் 100 பேருக்கு அன்றாடம் உணவு வழங்கப்பட்டு வருகிறது, கோயிலில் நடைபெற்ற பந்தியில் உணவருந்த வந்த நரிக்குறவ பெண்ணை அங்கிருந்த சிலர் பந்தியில் அமரக்கூடாது,  மிச்சம் மீதி இருந்தால் போடுகிறோம் ஓரமாக இருங்கள் எனக்கூறி சிலர் அவமானப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக தனக்கு நேர்ந்த அவமானத்தை அந்த நரிக்குறவ பெண் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியாக கொடுத்திருந்தார். அதிலு, நாங்களும் மனிதர்கள்தான், நரிக்குறவர் சமூகம் என்பதால் பொது இடத்தில் எங்களை அவமானப்படுத்துவதா, நாங்கள் படித்திருந்தால், நன்றாக உடை அணிந்து இருந்தால் இப்படி புறக்கணிக்கப்படுவோமா, எங்களுக்கும் காலம் வரும் என அந்தப்பெண் ஆதங்கம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இதை அறிந்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, ஸ்தலசயன பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகளை நேற்று ஆய்வு செய்ததுடன், சமூக வலைத்தளத்தில் மனக்குமுறலை வெளிப்படுத்தியிருந்த நரிக்குறவர் பெண் மற்றும் பொதுமக்களுடன் கோயில் வளாகத்தில் அமர்ந்து அன்னதான உணவை சாப்பிட்டார்.

அமைச்சரின் இந்த செயல் அங்கிருந்த பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது, சமூகத்தில் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் அல்ல என்பதை தனது செயலின் மூலம் அவர் உணர்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்தலசயன பெருமாள் கோவிலில் முதல் பந்தியில் உணவு வழங்கவில்லை என நரிக்குறவ பெண்ணின் ஆதங்கம் முதல்வரின் கவனத்திற்கு சென்றது, அந்தப் பெண் உட்பட அனைவருடன் அமர்ந்து உணவு அருந்தினேன் எனக் கூறியிருந்தார். அவர் நரிக்குறவ பெண்ணுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் பரவியது, அவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வரவேற்று வருகின்றனர். இதை மேற்கோள் காட்டி ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அதிமுக செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன்  நரிக்குறவர்களுடன் உணவருந்தி சமூகநீதியை காத்த மாண்புமிகு இந்து அறநிலைத் துறை அமைச்சர் திரு.சேகர்பாபு பாராட்டத்தக்கவர் என மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

சமூக நீதியை கருவாக கொண்டு தமிழக அரசியலில் வெற்றி நடை போட்டு வரும்  திமுக- அதிமுக என்ற இரு திராவிட இயக்கங்கள் அரசியலில் எதிர் எதிர் கருத்துக்களுடையதாக இருந்தாளும், சமூகநீதி கொள்கையின் கைகோர்த்து நிற்பதையே, அமைச்சர் சேகர் பாபுவை அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் பாராட்டியதில் புலப்படுகிறது. 
 

click me!