கருணாநிதி வழியில் செயல்படுங்கள்... தேசிய தலைவர்களின் வாழ்த்து மழையில் மு.க. ஸ்டாலின்..!

By Asianet TamilFirst Published May 2, 2021, 8:54 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி உறுதியாகிட்ட நிலையில், தேசிய தலைவர்கள் பலரும் தொடர்ந்து மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.
 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளைக் கைபற்றும் கட்சி அல்லது கூட்டணி ஆட்சியைக் கைபற்றும். இந்தத் தேர்தலில் 159 தொகுதிகளில் திமுக கூட்டணி  வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் திமுக மட்டும் தனித்து 130  தொகுதிகளில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியின் உறுதியாகிவிட்ட நிலையில் பிரதமர் மோடி மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். 
இதேபோல தேசிய தலைவர்கள் தொடர்ந்து மு.க. ஸ்டாலினுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்,  டெல்லி முதல்வர் அர்விந்த கெஜ்ரிவால், ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அபதுல்லா, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர்கள் சரத்பவார், ஆனந்த் சர்மா,  மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே உள்பட பல தேசிய  தலைவர்கள் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
இதில் லாலுபிரசாத் யாதவ் வெளியிட்டுள்ள செய்தியில், “கலைஞர் கருணாநிதியின் சமூக நீதி மரபுகளை முன்னெடுத்து, திராவிட சகோதர சகோதரிகளின் எதிர்பார்ப்புகளுகேற்ப செயல்படுவீர்கள் என்று நம்புவதாக” தெரிவித்துள்ளார். இதேபோல ராஜ்தாக்கரேவின் ட்விட்டர் செய்தியில், “ மொழி, பிராந்திய அடையாளத்துக்கு முன்னுரிமை அளித்த கருணாநிதியால் அமைக்கப்பட்ட பாதையில் நீங்கள் தொடர்வதைப் பார்ப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது” என்று வாழ்த்தியுள்ளார். 
 

click me!