நத்தம் விஸ்வநாதனுக்கு ஆட்டம் காட்டும் ஆண்டி அம்பலம்.. கோர்ட்டில் ‘வந்த’ வழக்கு

By manimegalai aFirst Published Sep 21, 2021, 6:47 AM IST
Highlights

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆண்டி அம்பலம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை: முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் தேர்தல் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆண்டி அம்பலம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் களம் கண்டார். திமுக சார்பில் ஆண்டி அம்பலம் போட்டியிட்டார். இந்த தேர்தல் முடிவில் ஆண்டி அம்பலத்தை விட நத்தம் விஸ்வநாதன் 11 ஆயிரத்து 932 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆண்டி அம்பலம் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது: வேட்பு மனுவில் நத்தம் விஸ்வநாதன் பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஊழல் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரம் செய்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் உச்சவரம்புக்கு அதிகமாக பணத்தை செலவழித்துள்ளார் என்று குறிப்பிட்டு உள்ளார். இதை விசாரித்த நீதிமன்றம், எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதனும், தேர்தல் ஆணையமும் 6 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

click me!