
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அவரது ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடை தேர்தல் வரும் 12ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி திமுக சார்பில் மருதுகணேஷ், அதிமுகவின் சசிகலா அணியில் டி.டி.வி.தினகரன், ஓ.பி.எஸ். அணியில் மதுசூதனன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ஜோசப் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஆர்.கே. நகர் இடை தேர்தலில் டி.டி.வி.தினகரன் போட்டியிட தடை விதிக்க வேண்டும். அவரது மனுவை தேர்தல் ஆணையம் ஏற்க கூடாது.
ரூ. 31 கோடி அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு தொடர்பு இருக்கிறது. இதனால், அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வரும் 23ம் தேதி டி.டி.வி.தினகரன் வேட்புமனு தாக்கல் செய்வதாக அறிவித்துள்ளார். ஃபெரா வழக்கில் தொடர்புடைய தினகரனின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் மட்டுமே போட்டியிட தடை என்ற தேர்தல் விதியை திருத்தி, வழக்கில் தொடர்பிருந்தாலோ அல்லது நிலுவையில் இருந்தாலோ போட்டியிடக் கூடாது என உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை தொடர்ந்துள்ள ஜோசப், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவில் மர்மம் இருப்பதாகவும், அவருக்கு அளித்த சிகிச்சை குறித்த நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.