உதார் உதயகுமார்! மூக்குடைத்த செங்கோட்டையன்: வரலாறு சொல்லும் வாழப்பாடியாரின் தியாகம்!!

First Published Jun 11, 2017, 8:58 PM IST
Highlights
a brief history about vaazhappaadiyaar


வரும்ம்ம்ம்ம்ம்...ஆனா வராது! டைப்பில் சக அமைச்சரின் சீரியஸ் சபதத்தையே சொல்லுவாரு ஆனா செய்ய மாட்டாரு என்று இன்னொரு சீனியர் அமைச்சர் கலாய்க்குமளவுக்கு உட்கட்சி ஒழுங்கு கந்தலாகி கிடக்கிறது அ.தி.மு.க.வில். 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்காவிட்டால் தன் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்...என்று ஆவேச சபதம் போட்டுள்ளார் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். மதுரை மாவட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் இப்படி செய்வோம் என்று திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸும் பேட்டி தட்டியிருக்கிறார். 

இந்நிலையில் சீனியர் அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சர் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களின் சபதத்தை பற்றி கமெண்ட் அடிக்கையில் அப்படி சும்மா சொல்வார்கள் ஆனால் ராஜினாமா செய்ய மாட்டார்கள். காவிரி பிரச்னைக்காக 1992_ல் தனது மத்திய அமைச்சர் பதவியையே ராஜினாம செய்தவர் காங்கிரஸ் சீனியர் தலைவர்களில் ஒருவரான வாழப்பாடி ராமமூர்த்தி. அவரைப்போல யாரும் தங்கள் கோரிக்கைக்காக பதவியை ராஜினாமா செய்ததில்லை. என்று மடேர் வார்த்தைகளில் பேசினார். 

உட்கட்சி டிசிபிளினை காற்றில் பறக்கவிட்டபடி செங்கோட்டையன் செப்பியது தவறுதான் என்றாலும் கூட , எதிர்கட்சியின் தலைவர் செய்த அரிய செயலை நினைவுகூர்த்து அதை சரியான சமயத்தில் கோட் செய்து பாராட்டிய விதம் அ.தி.மு.க.விலும் அரசியல் நாகரிகம் தப்பிப்பிழைத்து கிடக்கிறது என்பதை காட்டுகிறது. 

சரி! அது கிடக்கட்டும்...

வாழப்பாடியார் ராஜினாமா செய்த வரலாறு என்ன? என்று புருவம் சுருக்குபவர்களுக்காக இதோ தோழர் யோஹன் தொகுத்துக் கொடுத்த வரலாறு ...
ராஜிவ் காந்தியின் மறைவுக்குப் பிறகு பத்தாவது மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி 232 தொகுதிகளை மட்டும் கைப்பற்றியது.

மைனாரிட்டி அரசின் பிரதமராக புன்னகை மன்னன் (!?!) நரசிம்மராவ் பிரதமரானார். அப்போது கர்நாடக மாநிலத்திலிருந்து மட்டும் 23 எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கால் பதித்தனர். 
ஆட்சியும், காலமும் உருள ஆரம்பித்தது. வழக்கம்போல் காவிரி நீர் பங்கீடு விவகாரம் வேலையை காட்ட  துவங்கியது.

என்னவோ தெரியவில்லை அந்த முறை இந்த பிரச்னை பூதாகரமாக வெடித்தது. தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராக தனிப்பொறுப்புடன் இருந்தார். தமிழகத்தில் ஜெயலலிதா அரசு ஆண்டு கொண்டிருந்தது.

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு உரிய நீதியை பெற்றுத்தர மத்திய அரசை கோரி சில கட்சிகளும், தொடர் துரோகம் செய்யும் கர்நாடகத்தை கண்டிக்காதது ஏன்? என்று கண்டித்து சில கட்சிகளும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தன. 

மத்தியில் ஆள்வது காங்கிரஸ் அரசு. வாழப்பாடியாரோ தமிழக காங் தலைவர் அதிலும் மத்திய அமைச்சர். அவருக்கு இந்த விவகாரம்  ஏக நெருக்கடி கொடுத்தது. மன ரீதியாக அழுத்தத்தை உணர்ந்தார். சபிக்கப்பட்ட தன் மண் சார்பாக தனது உண்மையான வருத்தத்தை பதிவு செய்ய விரும்பினார். சட்டென்று எடுத்தார் ராஜினாமா முடிவை. 

தனது நெருங்கிய நண்பர்கள், அரசியல் ரீதியில் தனித்தனி இயக்கங்கள் என்றாலும் ஆரோக்கியமான நட்பை பாராட்டும் ஜெயலலிதாவிடம் கூட இது பற்றி கலந்து கொள்ளவில்லை அவர். தென் தமிழகம் இந்த முடிவால் அதிர்ந்தது.

நரசிம்ம ராவ் எவ்வளவோ பேசிப்பார்த்தார். ம்ஹூம்!எதுவும் பலிக்கவில்லை. ராஜினாமா செய்தது செய்ததுதான் என்றார். 

இத்தனைக்கும் வாழப்பாடியார் வகித்த தொழிலாளர் நலத்துறை அவர் விரும்பி கேட்டு நரசிம்மராவிடம் வாங்கியது. 
மத்தியமைச்சர் பதவியை துறந்து சென்னை திரும்பிய வாழப்பாடியாரை வெளியில் சொல்லாவிட்டாலும் மனதில் மானசீகமாக கொண்டாடினர் மாற்றுக்கட்சி தலைவர்களும். 

சரி, வாழப்பாடியார் ஏன் ராஜினாமா செய்தார்? உள்ளேயிருந்து போராடியிருக்கலாமே, அதுதானே புத்திசாலித்தனம்! என்று நீங்கள் நினைக்கலாம். 
ஆனால் யதார்த்தம் வேறு. நரசிம்மராவின் ஆட்சியோ மைனாரிட்டியாக இருக்கிறது.

எனவே ஒவ்வொரு எம்.பி.யும் ஆட்சியின் ஸ்திரதன்மைக்கு முக்கியம். அதிலும் முள்ளங்கி பத்தை போல் 23 எம்.பி.க்களை கர்நாடகா கொடுத்திருக்கிறது. என்னதான் தமிழகம் பக்கம் நியாயமிருந்தாலும் அதற்காக கர்நாடகாவை பகைத்துக் கொண்டால் இந்த 23 எம்.பி.க்களும் ராஜினாமா செய்யகூட தயங்கமாட்டார்கள் அல்லது ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கவும் யோசிக்க மாட்டார்கள்.

இப்படிப்பட்ட காரணங்களால் ஆட்சியே கவிழலாம். எனவே கர்நாடகத்துக்கு எதிராக காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அதிகாரம் செலுத்த வாய்ப்பே இல்லை என்பதை புரிந்து கொண்டே வாழப்பாடியார் இந்த வரலாற்று முடிவை எடுத்தார். 

இதுதான் வாழப்பாடியார் தன் மண்ணுக்கு காட்டிய அட்டகாச ஆதரவு! 
அருமையான சூழலில் மிக நேர்த்தியாக, தன் கட்சி முக்கியஸ்தர்களை கூட குத்திக் காட்டுகிறோம் என்கிற அச்சமெல்லாம் இல்லாமல் செங்கோட்டையன் சுட்டிக் காட்டியிருப்பதை சீனியர் பத்திரிக்கையாளர்  ஷ்யாம் உள்ளிட்டவர்கள் வரவேற்றிருக்கின்றனர். 

 

click me!