Heavy Rain: தமிழகத்தில் இயல்பை விட 80% கூடுதலாக மழை.. சென்னையில் இயல்பை விட 83% அதிகம். வானிலை மையம் பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Nov 29, 2021, 4:16 PM IST
Highlights

இதன் காரணமாக 1ஆம் தேதி வரை தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்றார்.

வரும் நாட்களில் மழையின் அளவு குறையும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் இயல்பை விட 80% கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும், சென்னையில் இயல்பை விட 83% அதிகம் எனவும் புவியரசன் தெரிவித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

குமரிக்கடல்  பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,  மற்றும் ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றார். அதேபோல் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனக் கூறினார். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான  மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்த அவர், கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் மிக கனமழையும், 43 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது என்று புவியரசன் தெரிவித்தார்.மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்க கடல் பகுதிகள் இன்று குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இந்நிலையில் நாளை தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனக் கூறினார்.

இதன் காரணமாக 1ஆம் தேதி வரை தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்றார். இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பு அளவு 35செ.மீ, ஆனால் 63செ.மீ மழை பொழிவு கிடைத்துள்ளது. இது இயல்பை விட 80% கூடுதல், அதேப்போல் 60செ.மீ கிடைக்க வேண்டிய இடத்தில்,113 செ.மீ மழை பெய்துள்ளதாகவும், இது இயல்பை விட 83% அதிகம் என்றார். இந்தாண்டு நவம்பர் மாதத்தில் சென்னையில் 91செ.மீ மழை பெய்துள்ளது. கடந்த 2015ல் நவ. மாதத்தில் 102 செ.மீ மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மூன்று முறை சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பெரும்பாலான இடங்களில் மழை நீர் முழுவதுமாக தேங்கி உள்ளது. குறிப்பாக சென்னை தியாகராய நகர், கோடம்பாக்கம், கேகே நகர் பகுதியை பொறுத்தவரையில் நான்கு நாட்களாகவே தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் ஒரு கன மழை பெய்தால் எப்படி தாக்குபிடிப்பது என்று அச்சம் சென்னை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் மழையின் அளவு அடுத்த 2 நாடுகளில் குறையும் என தெரிவிக்கப்பட்டிருப்பது சென்னை மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. 

 

click me!