முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில் இத்தனை யூனிட் மணலா? கனிம வளத்துறை கொடுத்த அறிக்கை..!

By vinoth kumarFirst Published Sep 19, 2021, 4:23 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 2016 முதல் 2021 வரை தான் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அவரின் சொத்து மதிப்பு 654 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை செப்டம்பர் 15ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். 

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டில் 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 551 யூனிட் மணல் கொட்டி வைக்கப்பட்டுள்ளதாக கனிமவளத் துறை அதிகாரிகள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி 2016 முதல் 2021 வரை தான் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அவரின் சொத்து மதிப்பு 654 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை செப்டம்பர் 15ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதனையடுத்து, கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 35 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 

இந்தச் சோதனையில் 34 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 1.80 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், 5 கணினி கார்டு டிஸ்க், ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 4.987 கிலோ தங்கம், 47 கிராம் வைரம், 7.2 கிலோ வெள்ளி பொருட்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு வழக்குக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் கே.சி.வீரமணியின் இல்லத்திற்கு பின்புறம் காலி இடத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 275 யூனிட் மணல் கண்டறியப்பட்டது. 

இந்நிலையில், வேலூர் மாவட்ட கனிமவள உதவி இயக்குநர் முன்னாள் அமைச்சரின் வீட்டில் ஆய்வு செய்தார். ஆய்வை தொடர்ந்து அங்கு இருந்த மணல் இருப்பு குறித்த அறிக்கையைத் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்துள்ளார். இந்த ஆய்வில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்த அளவை காட்டிலும் கூடுதல் யூனிட் மணல் கண்டறியப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 551 யூனிட் மணல் பதுக்கி வைத்திருப்பதாகவும், இதன் மதிப்பு 33 லட்சம் ரூபாய் என்று கனிமவள அதிகாரி அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

click me!