உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்.. அமைச்சர் நாசர் எச்சரிக்கை..!

By vinoth kumarFirst Published Sep 19, 2021, 3:30 PM IST
Highlights

 ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடர் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டது.  இதனை ஒரு தரப்பினர் பயன்படுத்தி ரூ.13 லட்சத்துக்கு முனுசாமி என்பவரின் மனைவி மங்கையை ஒருதலைபட்சமாக தேர்வு செய்தனர்.

முதல்வரின் சாதனைகள் கிராமம் வரை சென்றுள்ளதால் உள்ளாட்சி தேர்தலில் ஒட்டுமொத்தமாக வெற்றிபெறுவோம் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார். 

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி உள்பட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6, 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பல ஊர்களில் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் பதவி ஏலம் விடப்படும் புகார் வந்தது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பொண்ணங்குப்பம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் 2500 பேரும், ஊராட்சிக்கு உட்பட்ட துத்திப்பட்டு கிராமத்தில் சுமார் 7,500 பேரும் உள்ளனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடர் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டது.  இதனை ஒரு தரப்பினர் பயன்படுத்தி ரூ.13 லட்சத்துக்கு முனுசாமி என்பவரின் மனைவி மங்கையை ஒருதலைபட்சமாக தேர்வு செய்தனர். இதற்கு பொண்ணங்குப்பம் பலரும் எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், துத்திப்பட்டு பகுதிக்கு சென்று பொதுமக்களை அழைத்து பேசினார். அப்போது,  இச்செயல் அரசியலமைப்பு சட்டத்துக்கும் மக்களாட்சி தத்துவத்துக்கும் புறம்பானது. இது தண்டனைக்கு உரியதாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவிகளுக்கு ஏலம் விடுவது மக்களின் உணர்வுக்கு ஊறு விளைவிக்கும் செயல். இதனை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் நாசர்;- உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவதை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று எச்சரித்துள்ளார். முதல்வரின் சாதனைகள்  கிராமம் வரை சென்றுள்ளதால், உள்ளாட்சி தேர்தலில் ஒட்டு மொத்தமாக வெற்றி பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

click me!