கூடுதல் கட்டணம் வசூலித்த 40 மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து.. அமைச்சர் அதிரடி தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jul 6, 2021, 6:03 PM IST
Highlights

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் முழுமையாக செயல்படுவதற்கு தயார் நிலையில் உள்ளது. குன்னூரில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு உபகரணங்களை வழங்கினால் மாதத்திற்கு 1 கோடி தடுப்பூசி தயாரிக்க  தயாராக உள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் முன்களப்பணியாளர்கள் நாளிதழ், ஊடகம் மற்றும் செய்தி முகமைகளில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கான கொரோனோ நோய் தடுப்பூசி முகாமை மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், செய்திதுறை அமைச்சர் சுவாமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி என்கிற வகையில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வழக்கறிஞர்கள், பழங்குடியினர் என ஏராளமான முறையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. 

தமிழகத்தில் 3300 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் கருப்பு பூஞ்சை நோய்க்கான சிறப்பு வார்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையிலே கண்டறிந்து மருத்துவமனைக்கு வந்தால் தேவையான சிகிச்சை வழங்கப்படும்.
தற்போது 59 ஆயிரம் ஆம்போ டெரிசன் மருந்து கையிருப்பில் உள்ளது என்றும், ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தால் தனியார் மருத்துவம னைகளுக்கு அனுப்பப்படும், தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 122 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் தடுப்பூசிகள் கூடுதலாக வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நாளை மறுதினம் டெல்லி சென்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து தடுப்பூகள் மற்றும் எய்ம்ஸ் தொடர்பாக கோரிக்கை விடுக்கவுள்ளோம். தமிழகத்தில் இதுவரை 1,58,78,600 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தியுள்ளோம். 

கடந்த ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசி வீணக்கப்பட்டது. ஆனால் தற்போது மிக கவனமாக தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 1.25 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக போடப்பட்டுள்ளது. தடுப்பூசிகளில் கூடுதலாக அடைக்கப்படும் மருந்துகளை கூடுதலாக மக்களுக்கு செலுத்தி வருகிறோம். தமிழகத்தில் தடுப்பூசிகள் வருவதற்கு ஏற்ப மக்கள்தொகை அடிப்படையில் மாவட்டங்களுக்கு பிரித்து உடனடியாக அனுப்பப்பட்டு வருகிறது. அட்டவணைப்படி 11-ம் தேதிதான் தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்கும் தடுப்பூசி அளவை 75% லிருந்து 90% உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை குறித்து 13ம் தேதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதன் பிறகே இது குறித்து முடிவெடுக்கப்படும். புதிதாக தொடங்கவுள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து ஒன்றிய அமைச்சரிடம் பேசிய பிறகு மாணவர் சேர்க்கை குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். செங்கல்பட்டு தடுப்பூசி மையம் முழுமையாக செயல்படுவதற்கு தயார் நிலையில் உள்ளது. குன்னூரில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு உபகரணங்களை வழங்கினால் மாதத்திற்கு 1 கோடி தடுப்பூசி தயாரிக்க  தயாராக உள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கும் போது இது குறித்து மீண்டும் பேசப்படும். மேலும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக இதுவரை 40 மருத்துவமனைகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

click me!