நாட்டில் 30 சதவீதம் டிரைவிங் லைசன்ஸ் போலியானவை என்ற அதிர்ச்சி தரும் தகவலை கூறியிருக்கிறார் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி.
டெல்லியில் சாலைப் போக்குவரத்து தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:-
“போக்குவரத்து விதி மீறல்களை உடனடியாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 30 சதவீத டிரைவிங் லைசென்ஸ்கள் போலியானவை. போக்குவரத்து அமைச்சர் என்கிற முறையில் இந்த தகவல் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
போக்குவரத்து விதிகள் சரியான முறையில் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதற்காக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். விதி மீறல்களுக்கான அபராத்த் தொகையை அதிகரிப்பதால் ஆக்கப்பூர்வமான விளைவுகள் ஏற்படுகின்றன. கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் சாலை விதிகள் குறித்த அவசியத்தை மக்கள் புரிந்து கொள்கிறார்கள்.
அதே நேரத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் போக்குவரத்து துறை கணினிமயமாக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. வருங்காலத்தில் விதி மீறல்களை மக்கள் தாங்களே முன்வந்து தெரிவிப்பார்கள். அபராதங்கள் செலுத்துவது டிஜிட்டல் மயமாக்கப்படும்.” இவ்வாறு கட்கரி பேசினார்.