OPS : திமுக ஒப்பந்தகாரரிடம் 3 கோடி மக்களின் டேட்டா... ஓ.பி.எஸ் பகீர் குற்றச்சாட்டு..!

By Thiraviaraj RMFirst Published Dec 8, 2021, 11:55 AM IST
Highlights

மின்னகம் வாயிலாக நாளொன்றுக்கு 8,000 புகார்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்படுவது போல அரசு சுய விளம்பரம் செய்துகொண்டிருக்கிறது. 

3 கோடிக்கும் அதிகமான மக்களின் தரவுகள் ஊர், பெயர் தெரியாத திமுகவின் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என ஓ.பி.எஸ் குற்றம்சாட்டியுள்ளார். 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மின் நுகர்வோர்களிடமிருந்து வரும் புகார்களைப் பெற ஜெயலலிதாவால் 2003இல் தொடங்கப்பட்ட மின் தடை புகார் மையம், தற்போது டான்ஜெட்கோவிலும் மாநிலத்திலுள்ள 44 மின் பகிர்மான வட்டங்களிலும் வெளிப்படையான ஒப்பந்த அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுச் செயல்பட்டு வந்தன. மின் பயனீட்டாளர்கள் 1912 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார்களைப் பதிவு செய்யலாம். இச்சூழலில் இவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கு பதிலாக அனைத்து புகார்களையும் ஒருங்கே பெறும் வண்ணம் மின்னகம் என்ற ஒரு தனித் தளத்தை புதிய அரசு அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது, டான்ஜெட்கோ தலைமை அலுவலகத்தில் 195 பேரும் மின் பகிர்மான வட்டங்களில் 132 பேரும் பணியாற்றுவதாகவும் இதற்காக ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட ரூ.12 கோடி செலவிடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்த எந்த தகவலும் இல்லை. இதன் காரணமாக பலர் வேலையிழந்துள்ளதாகவும், இந்தப் புகார்களை மட்டுமே கவனிக்கும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பராமரிப்புப் பணிகள் மற்றும் இதர சேவைகள் தாமதப்பட்டுப் மக்களுக்கு அதிருப்தி நிலவுவதாகவும், அவை புகார்கள் வாயிலாக வெளிப்படுவதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாமல், 30 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தவர்கள் மின்னகப் பணி என்ற போர்வையில் முறை பணியாற்றும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன. ஆனால் மின்னகம் வாயிலாக நாளொன்றுக்கு 8,000 புகார்கள் பெறப்பட்டு நிவர்த்தி செய்யப்படுவது போல அரசு சுய விளம்பரம் செய்துகொண்டிருக்கிறது. 3 கோடிக்கும் அதிகமான மக்களின் தரவுகள் ஊர், பெயர் தெரியாத திமுகவின் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

மின்னகம் குறித்து சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியிலும் மின் ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியிலும் எழுந்துள்ளன. இதற்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசிற்கு இருக்கிறது. எனவே, முதல்வர் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, 'மின்னகம்' ஒப்பந்தம் வெளிப்படையாக நடைபெற்றதா என்பது குறித்த விவரங்களை வெளிப்படையாக டான்ஜெட்கோ இணையத்தில் வெளியிட வேண்டும். வேலையிழந்தவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பினை வழங்கவும், ஊழியர்களிடையே நிலவும் அதிருப்தியைக் களையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!